நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர்களுடன் சென்று டெல்லி கோர்ட்டில் ஆஜராக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில் இருவரும் கடந்த 7ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினம் அவர்களது தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி சோனியா, ராகுல் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்று சோனியாவும், ராகுலும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர். அவர்கள் ஜாமீன் பெறுவார்களா, இல்லையா என்பது இதுவரை புதிராகவே உள்ளது. இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனிடையே அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல் அமைச்சர்கள், மாநில கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை டெல்லி வரும்படி காங்கிரஸ் தலைமை அழைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் நீதிமனற்த்தில் ஆஜராக சோனியாவும், ராகுலும் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.