ஈழத்து மாகலைஞர் தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி பற்றி அம்சன் குமார் தயாரித்த ஆவணப் படத்துக்கும் இம்முறை இந்திய தேசிய விருது கிடைத்துள்ளது.
1933ம் ஆண்டு இணுவையில் பிறந்த தவில் கலைஞர் தட்சணாமூர்த்தி, தனது தந்தையாரான விஸ்வலிங்கத்தை முதல் ஆசானாகக் கொண்டு இசைக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் இணுவிலைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் சின்னத்தம்பியிடமும் பின்னர் யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் மகனை ஒரு தவில் மேதையாகக் காண ஆசைப்பட்ட தந்தையாகிய
விஸ்வலிங்கம் அவர்கள் ஒப்பது வயதிலேயே தட்சணாமூர்த்தியை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று நாச்சியார் கோவில் இராகவப்பிள்ளை அவர்களிடம் தவிலைக் கற்றுக்கொள்ள வைத்தார். அவரிடம் ஒன்பது வருடங்கள் கற்றுக் கொண்ட தட்சணாமூர்த்தி, இசைக்கலையின் மாபெரும் நுணுக்கங்கள் கைவரப் பெற்றவராக தேறியிருந்தார்.
இவரைப் பற்றி இந்தியக் கலைஞர் அம்சன் தயாரித்துள்ள ஆவணப்படத்துக்கு இம்முறை இந்திய அரசின் சிறந்த ஆவணப்படத்துக்கான விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
ஈழத்துக் கலைஞர்களின் திறமைகளுக்கு இதுவும் ஓர் அங்கீகாரமாகக் கருதப்பட வேண்டியதாக இந்த விருது குறித்து இசைக்கலைஞர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.