விமானங்களுக்கான எரிபொருள் விலை நிர்ணயிப்பு தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வெளிப்படையற்ற தன்மை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச விமான போக்குவரத்து சங்கம், வெளிப்படைத் தன்மையுள்ள விலை சூத்திரத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளதுடன் மீள எரிபொருளை ஏற்றுவது தொடர்பிலான செலவின அதிகரிப்பானது விமான தொழிற்றுறையை திணறச் செய்யும் ஒன்றாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
உலக விமான சேவைகள் ஒன்றியத்தை சேர்ந்த குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை பெற்றோ லிய கூட்டுத்தாபனத்தை சேர்ந்த அதிகாரிகள் உள்ளடங்கலான உத்தியோகத்தர்களை சந்தித்து ஏனைய ஆசிய விமான நிலையங்களிலான விமான எரிபொருள் விலையை விடவும் இங்கு விமான எரிபொருள் விலை குறிப்பி டத்தக்க அளவில் உயர்வாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
உதாரணத்திற்கு இலங்கையில் விமான எரிபொருள் விலையானது சிங்கப்பூரிலுள்ளதை விடவும் 21 சதவீதம் அதிகமாகவும் ஹொங்கொங்கிலுள்ளதை விடவும் 13 சதவீதம் அதிகமாகவும் பெங்களூரிலுள்ளதை விடவும் 8 சத வீதம் அதிகமாகவும் உள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைகள் அரபு வளைகுடா 'மொபக்' அமைப்பின் விலைகளுக்கு ஒத்திசைவாக இருக்கின்ற அதேசமயம் எரிபொருள் விலைகளிலான இடைவெளி முரணானதாகவுள்ளதை அவ தானிக்க முடிவதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கூறுகிறது.
சில சந்தர்ப்பங்களில் சர்வதேச எரிபொருள் குறிகாட்டியாகவுள்ள மொபக்கின் விலை சரிவடையும் காலத்திலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது விலைகளை தொடர்ந்து பேணி வந்துள்ளதாகவும் ஏக விநியோகஸ்தர் என்ற வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலைகளிலான வெளிப்படை தன்மையை பேணாமல் தான் தெரிவு செய்த விலைகளை நிர்ணயிக்கக் கூடிய நிலை காணப்படுவதாகவும் அந்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரித்த விலையானது இலங்கையின் விமான நிலையத்தையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையையும் பாதிப்பதாகவுள்ளது என அந்த சங்கம் எச்சரித்துள்ளது.