புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012


நாடெங்கும் அடை மழை! வடக்கு கிழக்கு உட்பட பத்து மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு! 6 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கடும் மழை காரணமாக மாத்தளை, ரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் ஐவரும் கண்டி, பாததும்பரையில் ஒருவருமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் நால்வர் மண்சரிவு காரணமாகவும் ஒருவர் வெள்ள நீரைப் பார்த்ததால் ஏற்பட்ட இதய அழுத்தம் காரணமாகவும் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இக்கடும் மழை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, காலி, பொலன்னறுவை, புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இம்மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக ஏழு மாவட்டங்களில் 1129 குடும்பங்களைச் சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அதேநேரம் இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டவர் களில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 3021 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 66 வீடுகள் முழுமையாகவும் 695 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருப்பவர்களுக்கும் உடனுக்குடன் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவென தேவையான நிதி மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இதேவேளை மழை தொடராகப் பெய்து வருவதால் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் 24 மணி நேர மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி குமாரி வீரசிங்க கூறினார்.
இந்நான்கு மாவட்டங்களிலும் பல பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை கருத்திற் கொண்டே இம்முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை அவர் கண்டி மாவட்ட நிலைமை தொடர்பாக மேலும் கூறுகையில், நேற்று முன்தினம் முதல் பெய்த கடும் மழை காரணமாக அக்குரணைப் பிரதேசத்தில் சுமார் 8 அடிகளுக்கு வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 150 க்கும் மேற்பட்ட கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், மாத்தளை மாவட்டத்திலுள்ள ரத்தொட்ட பிரதேசத்தில் மண்சரிவினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஐவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய்ப்படி இறுதிக் கிரியைகளுக்காக கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தில் 225 லயன் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதை குருநாகல் மாநகர முதல்வர் காமினிபெர முனகே மற்றும் மாநகர சபை உறுப்பினர் தியாகராஜா சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக குருநாகல் இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யுமாறு பணிப்புரை விடுத்ததோடு இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி - குருநாகல் வீதியின் பல இடங் களில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாய்ந்து செல்வதால் வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

ad

ad