தமிழர் கலாசார நாடகங்களை மேடையேற்ற பொலிஸார் தடை; தம்பாட்டியில் பிரதிகளையும் பறித்தெடுத்தனர்
தமிழரின் பண்பாட்டுக் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நாடகங்களை மேடை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று கூறி நாடகக் கலைஞர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் நாடகப் பிரதிகளையும் பறித்துச்
சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஊர்காவற்றுறை தம்பாட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை காந்திஜி நாடகக் கலைஞர்களால் காத்தவராயன் சிந்து நடைக் கூத்து, பண்டார வன்னியன் தென்மோடி நாடகக் கூத்து என்பன மேடை ஏற்றப்படவிருந்தன.
இவற்றை மேடையேற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் தம்பாட்டி காந்திஜி நாடக மன்றக் கலைஞர்கள் ஈடு பட்டிருந்தனர். இதன்போது நேற்று மாலை அந்தப்பகுதிக்கு வந்த பொலிஸார் கடுந்தொனியில் கலைஞர்களை எச்சரித்துள்ளனர்.
அத்தோடு தமிழர்களின் பண்பாட்டு கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இத்த கைய நாடகங்களை மேடை ஏற்ற அனுமதிக்க முடியாது என்றும், இந்த நாடகங்கள் விடுதலைப் புலிகளுக்குச் சார்பானவை என்றும் தெரிவித்து நாடகக் கலைஞர்களிடம் இருந்த நாடகப் பிரதிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.