தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வித்தித்துள்ள இடைக்கால தடை எதிர்த்து, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன்.26) உத்தரவிட்டது.
நடிகர் சங்கத் தேர்லை எதிர்த்து நடிகர்கள் விஷால் கிருஷ்ணா, நாசர், சி.கார்த்தி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருந்தது: ‘’2015-2018 ஆண்டுக்கான தேர்தல் ஜூலை மாதம் 15-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் என சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கடந்த 5-ஆம் தேதி அறிவித்தார். தற்போது தேர்தல் அதிகாரியை தன்னிச்சையாக சங்க நிர்வாகிகள் நியமித்துள்ளனர். அதனால் இந்தத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வாய்ப்பில்லை. எனவே, இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இதேபோன்று நடிகர் பூச்சிமுருகனும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்குப் பிறகு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவில், பொதுவாகத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால், அதனை நீதிமன்றங்கள் நிறுத்திவைத்து உத்தரவிடுவதில்லை. ஆனால், இந்த வழக்கில் இடைக்காலத் தடை வழங்குவதற்கு அடிப்படை முகாந்திரம் இருக்கிறது.
இதற்குத் தடை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து, பிரதான மனு மீதான விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும். அதனால், சங்கத்தின் தேர்தல் தள்ளிப் போய்விடக் கூடாது என்பதால், இரு தரப்பினரும் இரண்டு வாரங்களுக்குள் தங்களது விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
இந்தத் தடையை எதிர்த்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், ’’நடிகர் விஷால் மற்றும் நடிகர் பூச்சி முருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து, சரத்குமார் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.