புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2015

சரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை வெளியிட்டார் விஷால்

நடிகர் சரத்குமார் மீது கூறி வந்த ஊழலுக்கான ஆதாரங்களை இன்று நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்.


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். தேதி நெருங்கி வருவதால் நடிகர் சங்கத் தேர்தல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாடக நடிகர்களின்  வாக்குகளை பெறுவதற்கு சரத் அணியும், விஷால் அணியும் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், விஷால் தலைமயிலான நடிகர்கள் இன்று காலை மதுரை வந்தனர். பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘’நான் சரத்குமார் மீது அவதூறு பரப்பவில்லை, நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் நீதிமன்றம் சொன்ன கருத்தைத்தான் நான் குறிப்பிட்டேன்.’’ என்றவர், அதற்கான நீதிமன்ற உத்தரவை காட்டினார்.

அடுத்து, ஐந்து வருடங்களாக வருமானவரித் துறைக்கு கணக்கு காட்டாதற்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டிசையும் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ''நான் படித்தவன், ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டேன், சரத்தின் இமேஜைக் கெடுக்கும் எண்ணம் இல்லை’’ என்றவர்,
''சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் சங்க கட்டடத்தை வணிகர் சங்கத்துக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்ற முடிவு எடுத்தனர். அப்போது, இதுகுறித்து அனைத்து நடிகர் சங்க நிர்வாகிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர். மேலும், தற்போதுள்ள கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டி, நாமே வணிக வளாகம் நடத்தலாம் என்றும் அவர்கள் கூறினர். ஆனால், அதை ஏற்காமல் சரத்குமாரும், ராதாரவியும் அவசரமாக தனியாருடன் குத்தகைக்கு ஒப்பந்தம் போட்டனர். இதில் பல்வேறு முறைகேடு நடந்ததோடு, பணமும் பெரிய அளவில் கைமாறியுள்ளது. இதையடுத்துதான், அந்த கட்டடம் வேகமாக இடிக்கப்பட்டது'' என்றவர் அதற்கான ஆதாரத்தையும் காட்டினார்.
இதையடுத்து, தெப்பக்குளம் அருகேயுள்ள மண்டபத்தில் நடந்த நாடக நடிகர் சங்க கூட்டத்திலும் நடிகர் விஷால் பேசினார். இந்த கூட்டத்தில் நடிகர் வடிவேலுவும் அவருக்கே உரிய பாணியில் பேசினார்.

ஏற்கெனவே சரத்குமார் மதுரை வந்திருந்தபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மதுரை நாடக நடிகர்கள் பலர், விஷால் நடத்திய இந்தக் கூட்டத்திலும் கலந்துகொண்டனர்.

நடிகர் சங்க கட்டடம் குறித்து சரத்குமார் மீது விஷால் கூறி வந்த ஊழலுக்கான ஆதாரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதால், நடிகர் சங்கத் தேர்தல் இன்னும் சூடு பிடித்துள்ளது.

ad

ad