காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் இன்று 2வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கத்தினர், திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு கட்சிகளும், அரசியல் அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதன்படி, சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ரயில் மறியல் நடைபெற்றது. இதற்காக, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்த அவர்கள், அங்கு வாரணாசி ரயிலை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரை கைது செய்து, அப்பகுதியில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.