முதலமைச்சரின் குடை சிறியது. எனக்கு பெரியகுடையே தேவை என நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ
கணேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வவுனியா நகர்ப்பகுதியின் அபிவிருத்திகள் தொடர்பாக பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, முதலமைச்சர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்திருந்தார் எனவே அவருடன் இணைந்து செயல்படுவீர்களா? என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், “அவரது குடையில் எனக்கு இடமில்லை. அது சின்னகுடை. எனக்கு பெரியகுடையே தேவை. எனவே அது பெரியகுடையான பின்னர் பார்ப்போம்” என்று கூறினார்.
தமிழ் மக்கள் பேரவையின் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன், தனது புதிய கட்சி தொடர்பில் அறிவிப்பினை வெளியிட்டார். இதன்போது, அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.