'தி கிரின்ச்' (The Grinch) என்று பெயரிடப்பட்ட இந்த எண்ணெய் கப்பல், ரஷ்யாவின் ஆர்க்டிக் துறைமுகமான முர்மான்ஸ்க்கில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது பிரான்ஸ் கடற்படையால் இடைமறிக்கப்பட்டது.
இந்தக் கப்பல் கொமோரோஸ் தீவுகளின் கொடியுடன் பயணித்தாலும், உண்மையில் ரஷ்யாவிற்குச் சொந்தமானது என்றும், சர்வதேசத் தடைகளில் இருந்து தப்பிக்கப் போலி அடையாளத்தைப் பயன்படுத்துவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தகைய 'நிழல் உலக' கப்பல்கள் மூலம் கிடைக்கும் வருவாய், யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட உதவுவதாக மெக்ரோன் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பலின் மாலுமி 58 வயதுடைய இந்தியர் ஆவார்.
அவர் தற்போது மார்சேய் (Marseille) நகரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். கப்பலில் இருந்த மற்ற மாலுமிகள் அனைவரும் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் தற்போது கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.