தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தமது விடுதலை குறித்து அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான கவனம் செலுத்த வேண்டுமென அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று மாலை சென்று அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து உரையாடினர். இதன் போதே அரசியல் கைதிகள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளை சந்தித்த போது, அவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அதன் பின்பு மீண்டும் எங்களை அவர்கள் ஏமாற்றுவார்கள் எனின் உண்ணாவிரதம் இன்றி பாரியளவில் எனது போராட்டத்தை மேற்கொள்வோம் எனத் தெரிவித்தனர். அதைவிட பிணை வழங்கப்படுபவர்கள் அல்லது புனர்வாழ்வளிக்கப்படுபவர்களது பெயர் விவரங்களை கவனத்தில் எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
பிணையில் விடப்பட்ட 31 பேரில் பலர் சட்ட விரோதமானவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விடுதலை செய்யப்பட்ட 8 பேரில் ஒருவர் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் புனர்வாழ்வு அளிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை பார்வையிட்டு அவை அரசியல் கைதிகளினுடையதா? என பரிசோதித்தன் பின் புனர்வாழ்வளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.