முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கம்
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் ஜெனிவாவில் காட்டிக்கொடுக்கும். குறித்த விடயத்தின் பின்னர் இலங்கை பாரிய சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் ஜெனிவாவில் காட்டிக்கொடுக்கும். குறித்த விடயத்தின் பின்னர் இலங்கை பாரிய சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இம்மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை ஜெனிவா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் 4 முக்கிய விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் குறிப்பாக மக்களால் வெறுக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினை ஆதரிக்கும் மேற்கத்தேய நாடுகள் கடந்த கூட்டத்தொடர்களில் இலங்கைக்கு எதிராக பாரிய அழுத்தங்களை பிரயோகித்தன. அதன் காரணமாக இலங்கை பாரிய தாக்கங்களை கடந்த காலங்களில் எதிர்கொண்டது. நல்லாட்சி அரசாங்கமும் அவற்றை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக மௌனம் காத்தமை காணக்கூடியதாக இருந்தது.
குறித்த கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தின் அசமந்த போக்கினை கண்டித்து அதிருப்தி அறிக்கையினை வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் பாரிய அளவில் அரசியல் நெருக்கடிகள் இடம்பெற்றுள்ளது.
இதனை காரணம் காட்டி நல்லாட்சி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கடந்த அரசாங்கத்தினை காட்டிக்கொடுத்து தமது அரசியல் பழிவாங்கலினை நிறைவேற்றிவிடும் என்ற அச்சம் தற்போது தோன்றியுள்ளது.
எதிர்க்கட்சி பதவி தொடர்பில் பாரிய சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றன . இதனை பயன்படுத்தி சிலர் நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே இனவாதத்தினை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர். தமிழ் மக்கள் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததன் பின்னர் தமது எதிர்ப் பினை நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படுத்தினர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பினை வடகிழக்கு மக்கள் நிராகரித்து விட்டமையினை தேர்தல் பெறுபேறுகள் நன்கு புலப்படுத்தி நிற்கின்றன. தமக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருவதாக கூறி தொடர்ந்து ஏமாற்றப்பட்டதையும், அதன் காரணமாக இனிவரும் காலங்களில் எவ்வித பயனும் தோன்றாது என்பதையும் உணர்ந்த தமிழ் மக்கள் யதார்த்த நிலைக்கு உட்பட்டு சுயமான தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் தீர்மானத்தினை மதித்து செயற்பட வேண்டும். மக்கள் புதிய மாற்றத்தினை நோக்கி பயணிக்கும்பொழுது அதற்கு தடையாக அரசியல் சூழ்ச்சிகளை பிரயோகிப்பது அம்மக்களுக்கு விரோதமான செயலாகவே காணப்படுகின்றது.
எதிர்க்கட்சி தலைவர் நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் நலனை மாத்திரமே பற்றி கவனம் செலுத்துகின்றார். நாட்டின் தேசிய நலன் குறிப்பாக தமது இனத்தின் நலன் தொடர்பில் கவனம் செலுத்த தவறவிட்டமையே அவரது பதவிக்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனைக்கு முக்கிய காரணமாக காணப்படுகின்றது.
தேசிய அரசாங்கம் கடந்த கால அரசாங்கத்தினை பழிவாங்கும் நோக்கத்தில் செயற்பட்டு நாட்டினை காட்டிக்கொடுக்காமல் நாட்டின் எதிர்காலத்தின் நலன் கருதி செயற்பட வேண்டும். அவ்வாறன்றில் கடந்த தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பினை விட பல மடங்கான எதிர்ப்பினை பொதுமக்கள் வெளிப்படுத்த நேரிடும் என தெரிவித்தார்