மக்கள் நம்பிக்கையை பாதுகாத்து கடந்த 2015 ஜனவரி 08ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதிப் பதவிக்கு வந்து, அரசனொருவனிடம் காணப்பட்ட ஜனாதிபதி அதிகாரங்களை நீக்கினேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாம் கடந்த அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராக நின்றோம். தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறோம். நான் ஒருபோதும் ஊழல்வாதிகளை பாதுகாப்பதில்லை. அதுபோன்று முடியுமென்றால் நாம் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட அபிவிருத்திகள் குறித்த விவாதமொன்றுக்கு வருமாறு நான் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றேன். நாம் பழிவாங்கும் எண்ணங்களுடன் அரசியலில் ஈடுபடுவதில்லை. ஊழல்களுக்கு இடமளிப்பதில்லை. கிராமத்தையும் நகரத்தையும், நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது ஓரே குறிக்கோளாகும். அத்துடன் தூய்மையான ஆட்சியையும், புதியதொரு அரசியல் கலாசாரத்தையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த முறையும் தன்மீது நம்பிக்கை வைத்து ஊழல், மோசடி, வீண்விரயம், குடும்ப ஆதிக்கமற்ற தூய அரசியல் கலாசாரமொன்றை தோற்று விப்பதற்கு ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்தார்.