புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2013


தலைவர் குடும்பம் எங்கே? யுவதிகளிடம் விசாரணை செய்யும் படையினர்! புதிய போர்க்குற்ற ஆதாரம்!
40 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் எண்ணிலடங்கா தமிழர்கள் இலங்கை அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
தமிழர்களின் சுதந்திர வேட்கையை அடக்க தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் இளைஞர்கள், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதுடன் தெருக்களில் பலர் சடலங்களாக மீட்கப்பட்டனர், இக்காலம் வரை தமிழர்களின் நிலை இவ்வாறே காணப்படுகின்றது.
தமிழர் பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களாக்கப்படுவதும், தமிழர்களின் அடையாளங்களை அழித்து சிங்கள வரலாறுகளை தோற்றுவிப்பதும், அழிக்க முடியாத தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னங்களில் சிங்களவர்களின் வரலாறுகளை செதுக்குவதுமாக தமிழர்களின் தாயகப் பகுதி முழுமையாக சிங்களப் பிரதேசமாக மாற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக சிங்களவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
இலங்கை இனவழிப்பு அரசினால் நடத்தப்பட்ட கொக்கட்டிச்சோலை படுகொலை கூட கடந்த மூன்று வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் கொலைக்களத்துக்கு ஒப்பானது.
இந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக இலங்கை அரசு தமிழர் தாயகப் பகுதிகளில் பல கொலைக்களங்களை முன்னோடியாக செய்து முடித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆக, இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் தான் தமிழர்களை படுகொலை செய்தது என்ற போர்க்குற்றம் சான்றாகாது.
தமிழர் பிரதேசங்கள் இன்று முழுச் சிங்கள பிரதேசமாக காட்சியளிப்பதற்கு காரணம் அங்கு குடியிருந்த தமிழர் கருவறை மட்டும் சிங்கள அரசு தன் படைகளைக்கொண்டு அழித்துள்ளமையே காரணமாகும்.
இன்று இலங்கை அரசு சர்வதேசத்தின் முன் தலை நிமிர முடியாமல் தத்தளித்துக்கொண்டு உள்ளது. சர்வதேசத்திடம் இருந்து தன்னைப் பாதுகாக்க சில நாடுகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கின்றது.
சர்வதேசம், இலங்கை தன்னைப் பாதுகாத்துக் கொள்ளட்டுமே என்று வழங்கப்பட்ட கால அவகாசத்தைக்கூட இந்த இனவாத இலங்கை ஆட்சியாளர்கள் அக்கால அவகாசத்தை தமிழர்களின் இருப்பிடங்களை அழிக்கவும், தமிழர்களை இல்லாதொழிக்கவும், ஒட்டுமொத்தத்தில் இலங்கையை ஒரு தனிச்சிங்கள நாடாக மாற்றவுமே பயன்படுத்திக் கொண்டது.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் தமிழர் தாயகப்பகுதியில் நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தின் போது அதன் அரச படைகளால் மேற் கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களின் புதிய புதிய ஆதாரங்கள் தற்போதும் வெளிவரத் தொடங்கியுள்ளது.
வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு இன்னும் வலுச்சேர்க்கு முகமாக இந்த புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் அமையுமென நம்பப்படுகின்றது.
இலங்கை அரக்கர் படைகளால் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரனை படுகொலை செய்தமையை வெளிக்காட்டும் புகைப்படங்களை இலங்கை அரசு மறுத்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பாக இறுதிப்போர் நடைபெற்ற வேளையில் கடமையில் இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமது படையினர் தலைவர் பிரபாகரனின் குடும்பம் பற்றிய விபரங்கள் அறிந்திருக்கவில்லையென்றும் அதனால் இப்பாலகனை தமது படையினர் கொலை செய்யவில்லையென்றும் தற்போது பாலச்சந்திரன் தொடர்பான புதிய புகைப்படங்கள் வெளியானதும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இறுதிப் போரின் போது படையினரால் விடுதலைப்புலி போராளிகள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்த பெண்பிள்ளைகளிடம் தமிழீழ தேசியத்தலைவர் குடும்பம் தொடர்பான புகைப்படங்களை அவர்கள் முன் காட்டி விசாரணை செய்வதும், பின் அப் பெண்பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற விபரம் தெரியாமல் போயுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இலங்கை கொலை வெறி அரக்கர் படைகளிடம் சிக்கிக் கொண்ட இவ்விளம் பெண்கள் படையினரால் தனித்தும் கூட்டாகவும் விசாரணை செய்வதும், பின் அவர்களுக்கு ஏதோ குளிர்பானம் அருந்தக் கொடுப்பதும் இப்புகைப்படங்களில் காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையின் கொலைவெறி பிடிதத்த மகிந்தவை தலைமையாகக் கொண்ட ஆட்சியாளரின் கட்டளையின் கீழ் படுகொலை செய்யப்பட்ட தலைவரின் மகன் பாலச்சந்திரனுக்கும் இந்த கொடிய கொலைகாரப் பாவிப்படைகள் முதலில் அந்தப் பாலகனுக்கு உணவையும், நீரையும் கொடுத்து அந்த உணவு உட்செல்லும் முன்பே கொடூரமாகப் படுகொலை புரிந்தது இங்கு கவனிக்கத்தக்கது.
எனவே இந்த பெண் பிள்ளைகளின் நிலையும் எண்ணும் போது நெஞ்சம் பதறுகின்றது. இன்று உலகம் தமிழரின் உரிமையையும், அவர்கள் சிங்கள அரசால் அடக்கப்பட்டு வருவதையும் உணரத் தொடங்கியுள்ளது.
உலகில் எங்கும் இதுவரை நடைபெறாத ஓர் போர்க்குற்றத்தை இந்த சிங்கள ஆட்சியாளர்களும் அதன் அரச படைகளும் தமிழர் தாயகத்தில் செய்து முடித்துள்ளது.
தமது வீரத்தைக் காட்டவோ “நாம் தமிழனை எவ்வாறு அழித்தோம் என்று பார்” என்ற விறுமாப்போடு,ஒரு மனிதநேயமற்ற திமிரோடும், தமது இனத்துக்கும், தமது குடும்பத்திற்கும் காட்டி மகிழ்வதற்காக ஒருவித விளையாட்டுத்தனமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இன்று அவர்களுக்கே உலை வைத்துள்ளது என்பது தான் உண்மை.
இன்று சர்வதேசத்தின் முன் சிங்கள பயங்கரவாத மகிந்த அரசை போர்க்குற்றவாளியாக நிறுத்தியுள்ளது இந்த போர்க்குற்ற சாட்சியங்கள்.
இந்த சாட்சியங்கள் வெற்றி பெற வேண்டும்,தமிழர்களுக்கான சுதந்திரம் விரைவு பெற வேண்டும்.
இந்த சிங்கள பயங்கரவாத அரக்கர் ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளியாக பிரகடனப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை வழங்க இந்த சர்வதேசம் முன்வர வேண்டும்.
தர்மம் என்றும் சாவதில்லை, ஒருவனுடைய உடலை மட்டும் தான் அழிக்க முடியுமே தவிர அவனது உணர்வுகளையும், இலட்சியத்தையும் சுதந்திர வேட்கையையும் எவனாலும் அழிக்க முடியாது இது உலகத்தின் நியதி.

ad

ad