தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலைதான் வீசுகிறது: சரத்குமார்
தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை; ஜெயலலிதா அலைதான் வீசுகிறது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார். திருநெல்வேலியை அடுத்த பேட்டையில், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரனை ஆதரித்து அவர்
மக்களவைத் தேர்தலில் மோடி அலை வீசுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலைதான் வீசுகிறது. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ததில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவும், ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தவும் ஆர்வமாக உள்ளனர்.
அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு பெருகிவருவதை செல்லும் இடங்களில் எல்லாம் காணமுடிகிறது.
தமிழகத்திலும், மத்தியிலும், தொடர்ந்து ஆட்சியிலிருந்த திமுக தமிழகத்துக்கு பயன்தரும் எந்தத் திட்டத் தையும் செயல்படுத்தவில்லை. மீத்தேன் திட்டத்தையும், அன்னிய முதலீட்டில் சில்லரை வர்த்தகத்தையும் ஆதரிப்பதாகக் கூறிவிட்டு, இப்போது, அவற்றை எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். தேர்தலுக்காக இரட்டை வேடம் போடுகிறது திமுக. திமுகவின் சுயரூபம் தெரிந்துவிட்டது. குடும்ப நலனுக்காக ஆட்சி நடத்தியது திமுகவை மக்கள் புறக்கணிப்பர்.
பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் கூட்டணிக்கு எந்தவித கொள்கையோ, தொலை நோக்குப் பார்வையோ இல்லை. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கை கொண்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்னை குறித்தோ, மீனவர்கள் பிரச்னை குறித்தோ பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அக் கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தும் அவற்றுக்காக குரல்கொடுத்து வருகின்றன. எனவே, இந்தக் கூட்டணியும் குளறுபடிதான்.
மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’’ என்றார் அவர்.