யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது: தேர்தல்கள் திணைக்களம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் திணைக்கள உதவி ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெளியான தகவல்களின்படி யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 9 இல் இருந்து 6ஆக குறைவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இதனை மறுத்த மொஹமட், வவுனியா, நுவரெலியா, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறினார்.
இதன்படி, வவுனியாவிலும் நுவரெலியாவிலும் ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேநேரம் மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து தலா ஒரு ஆசனம் குறைக்கப்படவுள்ளதாக மொஹமட் சுட்டிக்காட்டினார்.
சனத்தொகை சுட்டியின் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் நிகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.