அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த சம்பிக்க ரணவக்க! - உதய கம்மன்பிலவும் இராஜினாமா
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சராக கடமையாற்றி வந்த சம்பிக்க இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு இணங்க சற்று முன்னர் சம்பிக்க பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சம்பிக்க ரணவக்க அரசாங்கத்தில் வகித்து வந்த சகல பதவிகளையும் துறக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரும் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தனது அமைச்சுப் பதவியை ராஜினமா செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உதய கம்மன்பில பங்கேற்கவில்லை என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சு பதவிகளிலிருந்து சம்பிக்க, கம்மன்பில இராஜினாமா
ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சர் உதயன் கம்மன்பிலவும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக்கட்சி இதனை உறுதி செய்தது.
அரசாங்கத்திடம் தமது கட்சி முன்வைத்த கோரிக்களை நிராகரித்த நிலையில் தாம் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஹெல உறுமயவின் இந்த தீர்மானமானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுக்கப்பட்ட பிறந்தநாள் பரிசாகும் என்று, கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதி செய்தல், ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்ககை எடுத்தல் உள்ளிட்ட 35 அம்சங்கள் அடங்கிய கோரிக்கையை அரசாங்கத்திடம் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த போதிலும் அவற்றை நிறைவேற்றும் முடிவில் அரசாங்கம் இல்லை என தெளிவாகிறது என்று அக்கட்சி கூறியது.
இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் செயற்குழு கூட்டத்தின் போது, சுமார் 4 மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சி மேலும் குறிப்பிட்டது.