உள்ளூராட்சித் தேர்தலைச் சாட்டாக வைத்து தென்னிலங்கையில் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருகின்றார். அதேபோல வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்று இங்கும் பல ராஜபக்சக்கள் மும்மரமாக செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ.சேனாதிராசா தெரிவித்தார். மானிப்பாய் பிரதேச சபைக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மானிப்பாய் கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவித்தாவது-,
வடக்கில் தான் நிகழ்த்திய போர்க்குற்றத்தை மறைக்கவும், ஆட்சியில் இருந்த போது அவரும் அவரது குடும்பமும் செய்த ஊழல் மோசடிகளை மறைக்கவும் கூட்டாட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
நாம் மகிந்தவின் கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஆட்சி மாற்றத்தை இந்த நாட்டில் கொண்டு வந்தோம். கடந்த அரச தலைவர் தேர்தலின் போது கூட இவ்வாறான பரப்புரைக் கூட்டங்களை நாம் நடாத்த வில்லை.
தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே மகிந்தவை தோற்கடிக்க மைத்திரியை ஆதரிக்க மக்களிடம் கோரினோம். நாம் எமது பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எம்மீது திட்டமிட்ட பழிகளையும், பொய்களையும் கூறி சிலர் விசமத்தனமான செயல்களில் ஈடுபட்டுவருகினர்னர்.
கடந்த அரச தலைவர் தேர்தலில் மகிந்த என்ற கயவன் தான்தான் இம்முறையும் வெற்றி பெறுவேன் என்று ஆனந்தக் களிப்பில் இருந்த போது எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அவர் தாம் அரசியல் தீர்வை வழங்க இருந்ததாகவும் அது தொடர்பாக சம்பந்தனை அழைத்த போது அவர் பேச வரவில்லை என்று அப்பட்டமான பொய்யை கூறிச் சென்றிருக்கின்றார்.
மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் நாம் உமது உரிமைகள் தொடர்பிலும் எமக்கான அரசியல் ரீதியான தீர்வினை பெறுவது தொடர்பாக அவருடன் சந்திப்புக்களை மேற்கொண்ட போது அவர் எம்மை உதாசீனம் செய்து தீர்வு பற்றிய பேச்சுக்கு இடமளிக்காது வந்தார். இதுதான் உண்மையில் நடந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்த எடுப்பில் விமர்சிக்கும் கஜேந்திரகுமார், ஆனந்தசங்கரி போன்றோர் இது வரை காலத்தில் தமிழ் மக்களுக்காக இறங்கி பணியாற்றி அவர்களது சட்டையில் புழுதி பட்டிருக்கின்றதா? இந்த இலட்சணத்தில் நாம் ஒன்றையும் மக்களுக்கு செய்யவில்லை என்று எம்மை விமர்சித்து வருகின்றார்.
ஜி.ஜி.பொன்னம்பலம் பிரசித்தி பெற்ற சட்டத்தரணி. ஆனால் அவரது பேரன் கஜேந்திரகுமார் சட்டத்தரணிகள் அணியும் கறுப்பு கோட்ஸ் அணிந்ததை நான் இன்றுவரை காணவில்லை. ஆனால் அவருடன் இருக்கும் சில சின்ன சட்டத்தரணிகள் ஏதோ எல்லாம் கதைக்கின்றனர்.
வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பதை முழுமையாக படித்து அறியாது தங்களுக்கு ஏற்றவகையில் கருத்துக்களை கூறுகின்றனர். இவ்வாறான மனோ நிலையில்தான் சிலர் உள்ளனர்.
மேடைகளில் கூக்குரலிடுபவர்கள் கேட்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தனை நாள்களாக மக்களுக்கு என்ன செய்தது என்று. அவர்களுக்கு இப்போது பதில் அளிக்கின்றேன். ஆட்சி மாற்றத்தின் பின்னர் இதுவரை காலமும் விடுவிக்கவே முடியாது என்று கூறிவந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய காணிகள், கேப்பாப்பிலவு பகுதியில் ஒருபகுதி, மேலும் பல காணி விடுவிப்புக்கள், மீள்குடியேற்றம், அதன் விளைவாக 50 ஆயிரம் கல்வீடுகள் நடப்பாண்டும் கிடைத்துள்ளது. இதனை விட முக்கியமாக அரசியல் தீர்வின் ஆரம்ப படியில் உள்ளோம் – என்றார்.