அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வவுனியாவில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகளை அமைச்சர் ரிஷாட் தனது ஆதரவாளர்களை வைத்து செயற்படுத்தி வருகின்றார். அதன் ஓர் அங்கமே பம்பைமடு குப்பைக்கிடங்கு விவகாரமும் ஆகும்.
பல ஆண்டுகளாக வவுனியா நகர மற்றும் கிராமங்களின் குப்பைகள் பம்பைமடு கிராமத்திலேயே கொட்டப்பட்டு வருகின்றன.
இவ்விடயம் ரிஷாட் பதியுதீனுக்கு தெரிந்திருந்தும் அப்பாவி முஸ்லிம் மக்களை தனது அரசியல் நலனுக்காக குப்பை கிடங்குகளையும் பொருட்படுத்தாமல் அதற்கு அருகில் சாளம்பைக் குளத்தில் வனவளத் திணைக்களத்தின் காடுகளை அழித்து குடியேற்றியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது தவறை மறைப்பதற்காக குறித்த மக்களை ஏவி இதுவரை காலமும் குப்பை கொட்டப்பட்டு வந்த இடத்தினை மாற்ற வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டியுள்ளார்.
ரிஷாட் அமைச்சராகவும் அபிவிருத்திக்குழுத் தலைவராகவும் இருந்தபோது குப்பைக் கிடங்கு விவகாரத்திற்குத் தீர்வாக சிறந்த முறையில் அதனை அமைப்பதற்கு 200 மில்லியனை பெற்றுத் தருவதாகக் கூறிய போதிலும் அதனை பெற்றுக்கொடுக்காதது அவரது தவறே தவிர வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவரின் தவறல்ல.
இன்று ஒரு மாற்றுத் தீர்வில்லாத நிலையில் குறித்த குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனக் கூறுவது மக்களையே பாதிக்கும்.
இதனை வெளிப்படையாகத் தெரிவிக்கும் பிரதேச சபைத் தவிசாளரை தரக்குறைவான வார்த்தைகளால் நாடாளுமன்றத்தில் கூறுவதனால் தனது தவறை ரிஷாட் மறைத்துவிட முடியாது.
எனவே தவிசாளர் சரியான தீர்மானத்தினை மக்கள் நலன் சார்ந்து எடுக்கும் போது தனது அரசியல் தேவைக்காக அவர் இயங்கவில்லை என ரிஷாட் எண்ணுவது மடமைத்தனமானது.
பிரதேச சபைத் தலைவரின் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்