சமயத் தீவிரவாதிகளின் தொடர்பில், பிரெஞ்சு
அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) கூறிய கருத்துகள், அரபு நாடுகள் சிலவற்றில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரை, செச்சென்ய இளையர் படுகொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் அந்தக் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
நபிகள் நாயகத்தைச் சித்திரிக்கும் சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்களைக் காட்டி அந்த ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தியதால் மனம் புண்பட்டதாக அந்த இளையர் கூறினார்.
"சமயவாதிகள், பிரெஞ்சு எதிர்காலத்தைக் கைப்பற்ற விரும்புகின்றனர்" என்று திரு. மக்ரோன் கூறியிருந்தார்.
சமயப் பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கம்கொண்ட, சட்ட நகல் ஒன்றை ஏற்கெனவே அவர் தாக்கல் செய்திருக்கிறார்.
சமயத் தீவிரவாதிகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று திரு. மக்ரோன் கூறியிருக்கிறார்.
சர்ச்சைக்கு மூலகாரணமான கேலிச் சித்திரங்களைக் கைவிடப்போவதில்லை என்றும் அவர் சூளுரைத்தார்.
அதை அடுத்து, ஜோர்தான், குவைத், கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில குழுக்கள்,
பிரெஞ்சுப் பொருள்களைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தன.
குவைத்தின் சில கடைத்தொகுதிகளில், பிரெஞ்சு நிறுவனங்களின் பொருள்கள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஜோர்தானிலும் அதே நிலை.
சவுதி அரேபியாவிலும், பிரெஞ்சுப் பேரங்காடியான Carrefourஐப் புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
அத்தகைய செயல்கள், அடிப்படையற்றவை என்றும் உடனடியாக அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.