தெற்கு ஒன்ராறியோவில் ரொறன்ரோ பெரும்பாக பிரதேசத்தில், நேற்று மாலையில் இருந்து கடும் பனிப்புயல் வீசி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மாலை வரை 15 தொடக்கம் 25 சென்ரி மீற்றர் வரையான கடும் பனிப்பொழிவுடன் கூடிய காற்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தப் பனிப்புயல், இன்று பிற்பகல் வரை சில இடங்களில் நீடிக்கும் என்று பிந்திய தகவல்கள் கூறுகின்றன.
சுமார் 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்றும் வீசி வருவதால், வாகன சாரதிகள் கூடுதல் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இன்று பாடசாலைகள் தொடங்கப்பட்டுள்ள போதும், பீல், யோர்க் பகுதிகளில் உள்ள பப்ளிக் மற்றும் கத்தோலிக்க சபை பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமமான வானிலையினால் இன்று பாடசாலை பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.