இந்த சம்பவம் தொடர்பில் இத்தாலிய ஊடகங்களில் , ‘அவர்கள் என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என் குழந்தைகள் எப்படி இறந்தார்கள், ஏன் இவையெல்லாம் நடக்க முடிந்தது என்பதை அறிய விரும்புகிறேன்.” என உயிரிழந்த பெண்ணின் கணவர் ருவான் கிரிவெல்லகே கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மனைவியான சசித்ரா நினன்சலா பெர்னாண்டோ தேவேந்திர மஹவடுகே (34) என்பவரே, இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்தார். பிள்ளைகளான 11 வயது சபாடி மற்றும் 3 வயது சிறுமி சந்தனி ஆகியோரே இவ்வாறு தாயாரால் கொல்லப்பட்டனர்.
இத்தாலியின் வெரோனா நகராட்சியின், போர்டோ சான் பான்கிரேசியோவில் உள்ள சமூக சேவைகள் கட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் இல்லத்தில் இந்த கொலைகள் அரங்கேறியுள்ளன. நேற்று முன் தினம் 25ஆம் திகதி காலை 9 மணிக்கு சற்று முன்னதாக பிள்ளைகள் இருவரையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, வீட்டிலிருந்து சசித்ரா காணாமல் போனார்.
அதன் பின்னர் நேற்று பிற்பகலில், அடிகே ஆற்றங்கரையில் அவரது தனிப்பட்ட உடமைகள் கண்டெடுக்கப்பட்டதுடன் செல்போனும் அவரது கைப்பையில் இருந்தது. அதன் பின்னர் சற்று தாமதமாக, லாசரேட்டோ பகுதியில் உள்ள பழைய அணைக்கட்டு அருகே அடிகே ஆற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பிள்ளைகளின் சடலம் மீதான பிரேத பர அறிக்கையின்படி, அவர்கள் தலையணையால் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் “தயவுசெய்து சிறுமிகளுக்கு காய்ச்சல் இருக்கிறது, எனக்கு மருந்து கொடுங்கள். அவர்களை தூங்க விடுங்கள். நான் அவர்களை இன்று பள்ளிக்கு அனுப்பவில்லை. ‘ என்பதே சசித்ரரா நேற்று முன்தினம் காலை சமூக சேவகர் ஒருவரிடம் பேசிய கடைசி வார்த்தைகள் என கூறப்படுகின்றது.