பொலிஸாரினால் தடுத்துவைக்கப்படுபவர்கள் உயிரிழப்பதும் சட்டவிரோத படுகொலைகள் அதிகரித்துள்ளதும் குறித்தும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் சுயாதீனமாக இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து மேலும் தெரியவருவதாவது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் 17 பக்க அறிக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவசியம் குறித்து அதிகளவு வலியுறுத்தியுள்ளது. பொலிஸாரினால் தடுத்துவைக்கப்படுபவர்கள் கொல்லப்படுவதும் சட்டவிரோத படுகொலைகளும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் நிலைமாற்றுக்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான முறையான நம்பகரமான புதிய திட்டமொன்றை உருவாக்கவில்லை என மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறித்த விசாரணையில் போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவி;க்கப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடனான கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தனிப்பட்ட தலையீடு காரணமாக பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் கடுமையானவையாக மாற்றப்பட்டுள்ளன என ஜெனீவா இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணைக்கான அனுமதியை பரிசுத்த பாப்பரசரிடமிருந்து கோருவதற்காக கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் ஜெனீவாவிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சிவில் நிர்வாகத்தை இயக்குவதற்காக இராணுவ அதிகாரிகளை நம்பியிருப்பது,குறித்தும் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த வருட அறிக்கையில் இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாக பணிகளில் இணைப்பதை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என்ற வேண்டுகோள் இடம்பெற்றிருந்தது. கடந்த வருடம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை இராணுவமயப்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமாகியுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீதான தாக்குதல் சிவில் சமூக செயற்பாட்டாளர்செகான் மாலக கமகே கைதுசெய்யப்பட்டமை ஆகிய விடயங்களும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. சுயாதீன ஊடகங்கள் உட்பட சிவில் சமூகத்தினர் செயற்படுவதற்கான தளத்தை மேலும் அதிகரிக்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது. இனமத பதட்டங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகளிடம் ஏற்கனவே காணப்பட்ட பல தனிப்பட்ட தகவல்களை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது,மேலதிக தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளிற்கான குழுக்கள் மற்றும் மற்றும் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்காக அந்த தகவல்களை குற்றவியல் நீதி அடிப்படையிலிருந்து மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஆராயவுள்ளது. தனிநபர்களிற்கு எதிரான தடைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது- அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் தடைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் செப்டம்பர் அறிக்கையில் இடம்பெறும். |