நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் மற்றும் நூல் ஆசிரியர் ஆகியோர் நூல் வெளியீட்டு விழாவிற்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் குறித்த நிகழ்வு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்ட நிலையில் திடீரென அங்கு நின்ற பெண், சில ஊடகவியலாளர்களை அடையாள அட்டை காட்டுமாறு வற்புறுத்தினார். இந்நிலையில் சில ஊடகவியலாளர்கள் நாங்கள் அடையாள அட்டையை காட்டுவதில் பிரச்சனையில்லை. நீங்கள் யார் என்பதை முதலில் கூற முடியுமா என கேள்வி எழுப்ப, நீங்கள் வெளியேறலாம் என குறித்த பெண்மணி கடுந் தொனியில் எச்சரித்தார். இந் நிலையில் அங்கு நின்ற பத்துக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்வை புறக்கணித்து வெளியேறினர். அதன் பின் ஏற்பாட்டாளர்கள் சிலர் ஊடகவியலாளர்களை அணுகி நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன் நிகழ்வுக்கு வருமாறு கோரினர். |