பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்துகை தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பதில் நிதி அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 96 அலைபேசிகளை சட்ட விரோதமாக கட்டுநாயக்க விமான நிலையம் ஊ டாக கொண்டுவந்த குற்றத்தை அலி சப்ரி ரஹீம் எம்.பி. ஏற்றுக்கொண்டார். அதனால்தான் அவருக்கு 75 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.அரசு அவருக்கு உதவவில்லை அதனால் அரசுக்கு எதிராக வாக்களிக்கின்றேன் என அவர் கூறியதையிட்டு அரசென்ற வகையில் நாம் பெருமையடைகின்றோம் எனக் கூறினார். இதன்போது குறுக்கிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளரும் எம்.பி.யுமான ரஞ்சித் மத்தும பண்டார ” அலி சப்ரி ரஹீம் எம்.பி. க்கு 75 இலட்சம் ரூபாவே தண்டம் விதிக்கப்பட்டது. இது மிகவும் குறைவானது.சுங்க சட்டத்தின்படி கொண்டுவந்த பொருட்களின் பெறுமதியை விடவும் 3 மடங்கு அதிக தண்டம் அறவிடப்பட வேண்டும் . ஆனால் அப்படி நடைபெறவில்லை ”என்றார். இதற்கு பதிலளித்த பதில் நிதி அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தண்டப்பணத்தில் ஆகக்கூடிய தண்டப்பணமே அது. இலங்கையில் இதுவரை சட்டவிரோதமாக பொருட்களை கொண்டு வந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தில் அலி சப்ரி ரஹீம் எம்.பி. க்கு விதிக்கப்பட்ட தண்டப்பணமே இலங்கை சுங்க வரலாற்றில் அதி கூடிய தொகை என்றார். இதன்போது எழுந்த மனோகணேசன் எம்.பி. அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டார் என்பதற்காக அவரை எதிர்க்கட்சியாக்க வேண்டாம். அப்படிப்பட்டவர் எமக்கு தேவையும் இல்லை. அவர் இப்போதும் அரசின் பிரதிநிதியாக புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக செயற்படுகின்றார். அவரின் அந்தப்பதவி தொடருமா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பதில் நிதி அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பார் என்றார். |