எல்பிட்டிய பிரதேச சபையின் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) தலைவரினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏழு உறுப்பினர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேர் இணைந்து, ஒன்பது மேலதிக வாக்குகளால் தோற்கடித்துள்ளனர். இலங்கையில், இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் எல்பிட்டிய பிரதேச சபை மட்டுமே தற்போது செயற்பாட்டில் உள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டம், பிரதேச சபையின் தலைவர் கருணாசேன பொன்னம்பெருமவின் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) தலைமையில், இன்று முற்பகல் 10 மணிக்கு, பிரதேச சபையின் மண்டபத்தில் ஆரம்பமானது. சமய வணக்கம் மற்றும் உயிரிழந்த படையினரை நினைவு கூர்ந்ததன் பின்னர், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகள், சபை தலைவரினால் முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. |