வலைத்தளங்களை வளைக்க முடியாது! -நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வலைப்பதிவர்கள்!வருகின்ற மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு குறித்து ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை
இணைந்து ஆய்வு மேற்கொண்டன.
ஆய்வின் முடிவில், மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கின்ற சக்தியாக வலைத்தளங்கள் இருக்கக் கூடும் என்று தெரிய வந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும், குஜராத்தில் 17 தொகுதிகளிலும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கலாம். தமிழகம், ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் முறையே 12, 11 மற்றும் 10 தொகுதிகளில் இதன் தாக்கம் இருக்கக்கூடும் என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், முக்கியப் பிரச்னைகளில் சமூக வலைத்தளங்களும் இணைய ஆர்வலர்களும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவது நாம் அறிந்த ஒன்றே. அண்ணா ஹஜாரே போராட்டம், இலங்கைத் தமிழர் பிரச்னை, டெல்லி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் கவனத்தை ஈர்த்ததற்கு சமூக வலைத்தளப் பதிவர்களே மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர். தமிழகத்தில் தமிழீழத்துக்கு ஆதரவான மாணவர் போராட்டம் பெற்ற வெற்றியின் பின்னணியிலும் இந்த வலைத்தளங்கள் இருக்கின்றன.
ரேடியோ, சேனல்கள், நாளிதழ்கள், வாரப் பத்திரிக்கைகள் என ஊடகங்களைத் தாண்டி, சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் இடும் வலைப் பதிவுகள் பெற்று வரும் முக்கியத்துவம் பிரம்மிக்க வைக்கிறது.
அட, கம்ப்யூட்டரைத் தட்டியே தேர்தலில் புரட்சி பண்ணப் போறாங்களாக்கும்..
-சி.என்.இராமகிருஷ்ணன்