தமிழகத்தில் பெண்ணொருவர் கொலை: இலங்கை அகதி கைது
தமிழகத்தின் கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் ஆலாந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கை அகதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆலாந்துறை கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் வழியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயான கல்பனா ( 46 வயது) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்பனா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 17 வருடங்களுக்கு முன் பிரிந்து குழந்தைகளுடன் ஆலாந்துறை பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இன்று அதிகாலை அதிகாலை அந்த பகுதியில் உள்ள கழிப்பறைக்கு பொது மக்கள் சென்ற போது அங்குள்ள தண்ணீர் தொட்டியின் கல்பனா சடலமாக கிடப்பதை கண்டுள்ளனர். இது குறித்து ஆலாந்துறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பேரூர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தங்கதுரை, இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கல்பனாவை எவரோ கடத்தி வந்து கழிப்பறையில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்திருப்பற்கான அடையாளங்கள் தெரிந்தன. தன்னை கொலை செய்தவரிடம் இருந்து தப்பிக்க கல்பனா போராடியுள்ளார். இதில் அவரது உடைகள் கிழிக்கப்பட்டிருந்தன.
கல்பனாவை வல்லுறவுக்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல் அவரை கழுத்தை நெரித்தும், தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கியும் கொலை செய்துள்ளனர். கல்பனா இறந்ததை உறுதி செய்த பின்னர் சடலத்தை அங்கேயே வீசி சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கல்பனாவை பூலுவபட்டி இலங்கை அகதி முகாமை சேர்ந்த உதயகுமார் (28) என்பவர் கொலை செய்திருப்பது பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கல்பனாவுக்கும் உதயகுமாருக்கும் இடையில் தொடர்பு இருந்து வந்துள்ளது. கல்பனாவை உதயகுமார் இந்த கழிப்பறைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு 2 பேரும் ஒன்றாக இருந்துள்ளனர். பின்னர் 2 பேருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த உதயகுமார், கல்பனாவை கழுத்தை நெரித்தும், தண்ணீர் தொட்டியில் அமுக்கியும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொலிஸார் உதயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.