புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2013

இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா?: கருணாநிதி உருக்கமான கடிதம்
இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணிக்குமா என்று கேள்வி எழுப்பி உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அவர் இன்று எழுதியுள்ள கடிதம்:
இசைப்பிரியா!  பெயரே அழகு! அவள் முகமோ, குழந்தை முகம்! கல்லூரி சென்று வரும் குழந்தை என்று கூடச் சொல்லலாம். 27 வயதே நிரம்பியவள்! அவர் உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம் விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் அவளும் ஒருத்தியாக தன்னை இணைத்துக் கொண்டதுதான்!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12-வயது மகன், பாலச்சந்திரனைச் சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண்களையும், முதியோர்களையும் கொன்றழித்த சரித்திரம் காணாத கொடுமைகளுக்கு ராஜபக்ச சர்வதேசச் சட்டப்படி பொறுப்பேற்று, உலக நாடுகளுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்.
பிரபாகரனின் மகனாகப் பிறந்த பச்சிளம் பாலகன், பாலச்சந்திரன் தன்னைக் கொலை செய்யப் போகிறார்கள் என்று புரிந்து கொள்ளக் கூட முடியாத பருவத்தில், அவன் மார்பிலே ஐந்து குண்டுகளைப் பாய்ச்சினார்களே, குலை நடுங்கும் அந்தக் கோரக் கொடுமைகளைக் கண்டோம்; கதறினோம்!
லண்டனைத் தலைநகராகக் கொண்ட ‘சனல்-4’ தொலைக்காட்சி நிறுவனம் எத்தனையோ ஆபத்துக்கிடையே படம் எடுத்து, தயாரித்த அந்தக் கொடுமையான காட்சிகள் தான் எத்தகையவை?
பாலச்சந்திரன் கைக்கும் வாய்க்கும் இடையே ரொட்டித் துண்டுடன் இருந்ததையும், அடுத்த படத்தில் அவன் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கிப் பிணமாகக் கிடந்ததையும் விளக்கிடும் காட்சி,
தாயும் குழந்தையும் ஒன்றாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த காட்சி,
அப்பாவிப் பெண்கள் ஆடைகள் நீக்கப்பட்டு, நிர்வாண நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் காட்சி
ஆண்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, கைகளைப் பின்னால் கட்டி, முதுகிலே சுட்டுக் கொல்கின்ற காட்சி,
விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் ரமேஷ் என்பவர் முகம் சிதைந்த நிலையில் கொல்லப்பட்டு பிணமாகக் கிடக்கின்ற காட்சி,
அந்தக் கொடுமைகளைக் கண்டோம்.
நேற்றைய தினம், பெண்புலி “இசைப்பிரியா”வை - அவள் வயதையொத்த மற்ற பெண்கள் எல்லாம் எத்தனையோ கனவுகளில் மூழ்கித் திளைத்திருந்த நேரத்தில், “தமிழ் ஈழம்” எனும் தாயகக் கனவை நெஞ்சத்திலே தாங்கித் திரிந்த அந்தப் பெண் குயிலை, சிங்கள இராணுவம் சீரழித்து, படுகொலை செய்த காட்சியையும் காண வேண்டிய கொடுமைக்கு நாம் ஆளாக்கப்பட்டோம்.
இங்கிலாந்தின் சனல் - 4 என்ற “டெலிவிஷன்” நிறுவனம்தான் இலங்கை இராணுவத்தின் இத்தகையப் போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது இப்படிப்பட்ட நெஞ்சம் குலுங்குகின்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டு, சிங்களக் காடையர்களின் கொடுமைகளை உலகத்தின் கண்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
இசைப்பிரியா போரின் போது கொல்லப்பட்டதாக ராஜபக்ச அரசு இதுவரை சொல்லி வந்த கதையை, ஏமாற்று வித்தையை வெளிப்படுத்துகின்ற வகையில் இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காட்சிகள் இன்று ஆதாரத்தோடு வெளிவந்துள்ளன.
ஏற்கனவே பல தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள சனல் - 4  தொலைக்காட்சி நிறுவனம் தற்போது இசைப்பிரியா தொடர்பான காட்சிகளையும் படமாக்கி வெளியிட்டுள்ளது.
அந்தக் காட்சியில் வயல்வெளி போன்றதொரு பரந்த நிலப்பரப்பு வழியாக இசைப்பிரியா தப்பிச் செல்ல முயலும்போது, இலங்கை இராணுவ வீரர்கள் அவளைப் பிடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். ஈரமான தரையிலே அவளை உட்கார வைக்கிறார்கள்.
அவளை நோக்கிச் செல்லும் இராணுவ வீரர்கள் ஒரு வெள்ளைத் துணியைக் கொடுத்து, அவளைப் போர்த்தி, அழைத்துச் செல்கின்ற காட்சியும் அதிலே இடம்பெற்றுள்ளது. அப்போது இராணுவ வீரன் ஒருவன், இசைப்பிரியாவைக் காட்டி, இவர்தான் பிரபாகரனின் மகள் என்று கூறுகிறான். இசைப்பிரியா அதனை மறுக்கும் குரல் அந்த வீடியோ காட்சியில் கேட்கிறது.
இசைப்பிரியா பாடுகின்ற காட்சி ஒன்றும் ஒளிபரப்பாகிறது. எப்போதும் பேனா, கமராவுடன் சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் இசைப்பிரியா, தன்னுடைய தற்காப்புக்காக ஒரு துப்பாக்கியைக் கூட வைத்துக் கொள்ளமாட்டார் என்று அவருடைய நெருங்கிய தோழி ஒருத்தி ஏற்கனவே கூறியிருந்தார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது, சனல் - 4 நிறுவனம், பிரபாகரனின் மகன் செல்வன் பாலச்சந்திரன் பற்றிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
தற்போது இலங்கையிலேயே “கொமன்வெல்த்” நாடுகளின் மாநாடு நடைபெறவிருக்கும் நேரத்தில், இசைப்பிரியா தொடர்பான காட்சிகளை, அதே “சனல் - 4” நிறுவனம் உலகம் முழுவதிலும் வெளிக்கொணர்ந்து நம்மையெல்லாம் தேம்பிப் புலம்ப வைத்துள்ளது.
இந்தக் கொடுமையான காட்சியை நம்முடைய நாட்டுப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், ஏன் அந்தக் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டுமென்று இன்னமும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்ெகளும் கண்ட பிறகும், அந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறார்களா?
சிங்களவர்கள் ஆதிக்க வெறியோடு, ஈழத் தமிழர்களுக்குச் செய்திருக்கும் கொடுமைகள் ஒன்றா, இரண்டா?
திருவொற்றியூரைச் சேர்ந்த தனபதி ஒரு தொழிலாளி! அவருடன் சென்றவர்களும், அவரும் கதிர்காமம் சென்று திரும்பும் வழியில், அவர்களை ஏற்றி வந்த பேருந்து பழுதுபட்டு விடுகிறது. அதைப் பழுது பார்க்க விட்டு விட்டு, தனபதியும் வேறு இருவரும் ஒரு முடியலங்காரக் கடைக்குச் செல்கிறார்கள். அப்போது சிங்கள வெறியர்கள், கையில் கோடரியுடன் கூட்டமாக வருகிறார்கள். தனபதியைக் கண்டதும், “ஆ! அதோ ஒரு தமிழன்!” என்று கூறிக் கொண்டே, மான் குட்டி மீது பாயும் ஓநாய்களைப் போலப் பாய்கின்றனர்! இரத்தம் கொப்பளிக்கிறது. சிங்களவர் கோடரிக்கு தமிழ்க் குருதியால் குளிப்பாட்டிக் குதூகலம் நடத்துகிறார்கள்.
இதோ மற்றொரு காட்சி! தமிழனுடைய உயிரைப் போக்கி, உடலைக் கூறுகூறாக்கி, அவனுடைய தசைகளைப் பாளம் பாளமாக்கி அவைகளைக் கூடையிலே போட்டு “இங்கே தமிழனுடைய மாமிசம் விற்பனைக்குக் கிடைக்கும்” என்று போர்டு எழுதி வைக்கப்பட்ட காட்சி!
இலங்கையில், கொழும்புச் சிறைச்சாலைக்குள்ளே சிங்கள வெறியர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து தமிழீழ விடுதலை வீரர்கள் 37 பேரைக் கொன்று குவித்த சம்பவம் மறக்கக் கூடியதா?
தமிழீழ விடுதலை வீரர்களின் தானைத் தளபதியாக இருந்த தங்கத்துரையும், தளகர்த்தர்களாம் குட்டிமணி என்ற யோகச்சந்திரனும், ஜெகனும் மற்றும் 34 தமிழீழ விடுதலைக் காளைகளும் சிங்களத்துச் சிறுநரிகளின் திடீர்த் தாக்குதலால் சிறைச்சாலைக்குள்ளே கொலையுண்டிருக்கிறார்கள்.
அந்தக் குட்டிமணிக்கும், தங்கத்துரைக்கும் நீதிமன்றத்தில் “உங்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது” என்று நீதிபதி தீர்ப்பளித்த நேரத்தில், தங்கத்துரை, “நாங்கள் இறந்துபோய் விட்டால், எதிர்காலத்தில் உருவாக இருக்கின்ற தமிழ் ஈழத்தை உங்களுடைய சட்டதிட்டம் கட்டுப்படுத்த முடியாது” என்று சொன்னான்.
அதே நீதிமன்றத்தில்தான் குட்டிமணி, “நான் மரணத்திற்காகப் பயப்படுகின்ற கோழையில்லை; என்னைத் தூக்கு மாட்டிக் கொன்றுவிட்ட பிறகு, என்னுடைய கண்களை எடுத்து ஈழத்திலே இருக்கின்ற பார்வையற்ற ஓர் இளைஞனின் கண்ணுக்குப் பொருத்துங்கள். வருங்காலத்தில் மலர இருக்கின்ற சுதந்திர தமிழ் ஈழத்தை நான் காண முடியாவிட்டாலும், அந்த இளைஞனுக்குப் பொருத்தப்படும் என் கண்ணால் பார்த்து மகிழ்வேன்” என்றான்.
அவர்களையெல்லாம் சிறைக் கொட்டடிக்குள் கொலை செய்து, “இந்தக் கண்களால்தானே ஈழத் தமிழகத்தைக் காண விரும்பினாய்!” எனக் கேட்டு, அவர்களின் கண்களைப் பிடுங்கி, கீழே போட்டு மிதித்த கோரக் கொடுமை, இதே இலங்கையிலே தான் நடைபெற்றது.
அந்த இலங்கையிலேதான் தற்போது கொமன்வெல்த் மாநாடு நடத்தப் போகிறார்களாம். அதிலே இந்தியா கலந்து கொள்ள வேண்டுமென்று இங்கேயுள்ள தமிழர்கள் சிலரும் கூறுகிறார்கள். இரத்தம் கொதிக்காதா?
பாஸ்கரன் கதை மறந்து விட்டதா என்ன? பாஸ்கரன் யார்? அவன் ஒரு தமிழன்! போதாதா? அவனை ஒரு மரத்திலே கட்டி வைத்து விட்டு, நடுவீதியிலே அவனுடைய மனைவியை நிர்வாணமாக்கிக் கற்பழிக்கிறார்கள். அதோடு விட்டார்களா மாபாவிகள்? நிர்வாணமாக்கப்பட்ட அந்தப் பெண்ணை தலைகீழாக அருகருகே இருந்த இரண்டு பாக்கு மரங்களில், ஒரு காலை ஒரு பாக்கு மரத்திலும், இன்னொரு காலை அடுத்து இருந்த இன்னொரு பாக்கு மரத்திலும் கட்டி, பாக்கு மரத்தின் நுனிகளை ஒன்றாக இணைத்துக் கட்டி, பிறகு திடீரென பாக்கு மரத்தின் நுனிகளை வெட்டி விடுகிறார்கள். பாக்குமரம் இரண்டும் தனித்தனியாகப் பிரியும்போது, அந்தப் பெண்ணின் உடல் இரண்டாகப் பிளவுபட்டு கீழே விழுகிறது. அவ்வளவும், அவளுடைய கணவன் பாஸ்கரன் கண்ணுக்கு முன்பாக நடக்கிறது. பாஸ்கரன் செய்த குற்றம் என்ன? தமிழனாகப் பிறந்ததுதான்!
அவர்கள் வாழ்ந்த அந்த கொழும்பிலேதான் கொமன்வெல்த் மாநாடு நடைபெறப்போகிறது. அதில் இந்தியா கலந்து கொண்டால், நாமெல்லாம் தமிழர்கள் தானா என்று சரித்திரம் சாபமிடாதா?
இப்படி இலங்கையின் பூர்வீகக் குடிமக்களாகிய தமிழ் மக்களை - இலங்கையை ஆண்ட இனத்தின் வம்சாவழிகளை - பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், புழுதியில் புரளும் ஜீவராசிகளாய், ஆதரவேதுமற்ற அனாதைகளாய் எண்ணி, சிங்களப் பேரினவாதம் சித்திரவதை செய்து நசுக்கிச் சீரழித்து வருவதைக் கண்டு, தாய்த் தமிழகத்திலே உள்ள நாம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்.
தமிழினப் படுகொலைக்குச் சாட்சிகளாய் இருக்கும் சர்வதேசச் சமூகத்திடம் நீதி கேட்கிறோம்.
ஈழத்தில் நடந்த இனத் துடைப்பு நடவடிக்கைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், வரலாறு கண்டிராத போர்க் குற்றங்களுக்கும் சுதந்திரமானதும், நம்பகமானதுமான, சர்வதேச விசாரணை வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ளும் வகையில், ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதற்காகச் சர்வதேசக் கருத்தை ஒன்று திரட்டிடும் முயற்சியைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வோம்!
இசைப்பிரியா சின்னாபின்னப்படுத்தப்பட்ட சாட்சியங்களைக் கண்ணுற்ற பிறகாவது, அதற்குக் காரணமான சிங்கள அரசைக் கண்டித்திடும் வகையிலும், நெஞ்சை உலுக்கிடும் இந்த நிகழ்வுக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், இலங்கையிலே நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இங்குள்ள தமிழர்களும், உலகெங்குமுள்ள தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்!
என்ன செய்திடப் போகிறது இந்திய அரசு? இசைப்பிரியாவுக்கு நடைபெற்ற கொடூரத்திற்குப் பிறகும் இந்தியா இலங்கை செல்ல வேண்டுமா?
இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? என்றவாறுள்ளது.

ad

ad