வாஷிங்டன் சென்றடைந்தார் அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் ஜெய்சங்கர்
தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டிற்கான புதிய இந்திய தூதராக அறிவிக்கப்பட்ட ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார்.விசா மோசடி குற்றச்சாட்டில்
கோப்ரகடே கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட விரிசலை முடிவுக்கு கொண்டு வந்து இணக்கமான சூழ்நிலை ஏற்படவேண்டிய நிலையில், அவர் தூதராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து, தூதராக நியமிக்கப்பட்டதற்கான சான்றுகளை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக அவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தில் முதல் இந்திய செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.