இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் அவை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் - பாதுகாப்பு அமைச்சு
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் கடமையாற்றிய இசைப்பிரியா இராணுவ காவலரண் முன்னால் பிறிதொரு போராளிப் பெண் என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் உயிரோடு உள்ள புகைப்படங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
சனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே இவ்வாறான பல புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு தொடர்ந்தும் ஆய்வுகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தொடர்பிலும் அதில் கவனம் செலுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.
குறித்த தொலைகாட்சியானது ஏற்கனவே பல புகைப்படங்களை ஆதராங்கள் இன்றி போலியாக முனவைத்திருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கும் என தாம் நம்புவதாகவும் விசாரணையின் இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
போலி ஆவணத்தை கொண்டு இராணுவத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக இவ்வாறான போலி புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்படுவதாக குறிப்பிட்ட பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இவ்வாறான புகைப்படங்களின் உண்மைத் தனமைக் குறித்து தொடர்ந்தும் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிட்டார்.
ஏற்கனவே பாதுகாப்பு தரப்பு சனல் 4 வீடியோ ஆதரங்களை விஷேட ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அந்த ஆய்வினுள் இந்த புகைப்படங்கள் தொடர்பிலான விடயமும் உள்ளடங்கியிருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக படையினரால் இசைப்பிரியா மீட்கப்பட்டு அழைத்து வருவது போன்ற காட்சிகளை சனல் 4 வெளியிட்டிருந்தது. எனினும் இறுதி யுத்தத்தின் போது படையினருடனான மோதலில் இசைப்
பிரியா கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையிலேயே இசைப் பிரியா படையினரின் காவலரன் ஒன்றின் முன்னிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்துக்கு மேலதிகமாக மேலும் சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா! புகைப்பட ஆதாரம் வெளியானது
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது இவர் மிக
வும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.
எனினும் வழமைபோன்று இராணுவம் அதனை மறுத்திருந்தது. போலியான ஆவணங்களைக் கொண்டு இராணுவத்தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கும் நடவடிக்கை என்று அதனை வன்மையாகக் கண்டிருத்திருந்தது.
இந்நிலையில் மேற்குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் இசைப்பிரியா இராணுவ முகாமுக்குள் உயிருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இனவழிப்பின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அரசாங்கமும் இராணுவத்தரப்பும் என்ன பதில் சொல்லப் போகின்றனர்?