புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2015

இலங்கையின் அதிகபட்ச வைஃபை பயன்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்தில் B B C


13 ஜூன் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:39 ஜிஎம்டி
இலங்கை அரசாங்கத்தால் பொது இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள வைஃபை எனப்படுகின்ற கம்பில்லாத இ
ணையத் தொடர்பு சேவையானது நாட்டிலேயே யாழ்ப்பாணத்தில் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கண்டறியப்பட்டிருக்கின்றது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள பொது நூலகம், ரயில் நிலையம் போன்ற 100 இடங்களில் அரசின் இந்த இலவச இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. இணையத்திற்கான இந்த இலவச சேவையைப் பயன்படுத்துவதில் யாழ்ப்பாணமே ஒப்பீட்டளவில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்களில் ஒருவரும், யாழ் பல்கலைக்கழகத்தின் இணைய வழியிலான சுயகல்வி கற்றலுக்கான பிரிவின் நிர்வாகியுமான தங்கராஜா தவரூபன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
"இயல்புநிலை திரும்பியதன் இன்னொரு உதாரணமல்ல"
இலங்கையில் ஏற்கனவே யாழ்ப்பாணத்திலேயே பொதுமக்களினால் இணையம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய தவரூபன், அதன் நீட்சியாக இலவசமாக இணையத்துடன் தொடர்பு கொள்வதற்காக அரசாங்கம் வழங்கியுள்ள இலவச வைஃபை இணைப்பை இங்குள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருதாகவும் தெரிவித்தார். அரசின் இந்த இலவச இணைய சேவை இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர்களை மேலும் ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேசமயம், யாழ்ப்பாண மக்கள் அதிகமாக இணையத்தை பயன்படுத்துவதை அங்கு ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சியென்றோ, அல்லது யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இயல்பு நிலைமை அங்கு ஏற்பட்டுவிட்டது என்பதற்கான அடையாளமாகவோ கொள்ளமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்பல்கலைக்கழக இணையவழி சுயகல்வி கற்றல் பிரிவின் நிர்வாகி தங்கராஜா தவரூபன்
யுத்தம் நடைபெற்ற காலத்திலேயே யாழ்ப்பாணத்து மக்கள் இணையத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர், இணையப் பயன்பாட்டில் இருந்து வந்த கட்டுப்பாடுகள், முட்டுக்கட்டைகள் என்பன தளர்த்தப்பட்டு அதற்கான வாய்ப்பும் வசதியும் அதிகரித்திருப்பதும், கம்பியில்லாத இலவச இணைய இணைய சேவையை மக்கள் பயன்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதலாம் என்றும் தவரூபன் குறிப்பிட்டார்.
"உரிய முன்னெச்சரிக்கைகள் தேவை"
இத்தகைய அதிகரித்துள்ள இணையத் தொடர்புப்பாவனை ஒருபக்கம் தகவல் தொடர்புத்துறையில் நல்லபல முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்களை நிகழ்த்திவந்தாலும், யாழ்ப்பாண பிரதேச இளைஞர் யுவதிகள் மத்தியில் சமூகவிரோதச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் இந்த இணையம் பெரிதும் உதவியிருக்கிறதோ என்கிற கவலைகளும் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பின்னணியில் இலங்கை அரசாங்கம் கம்பியில்லா இலவச இணைய சேவையை மேலும் நாடு தழுவிய அளவில் விஸ்தரிக்கும்போது, அதன் எதிர்மறை சமூக பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்கிற கவலைகளை போக்க அரசாங்கம் முயலவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
எனவே இணைய பரவலின் எதிர்மறை பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகள், மாணவர்கள் மத்தியில் இணையத்தின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நன்மையான நோக்கங்களுக்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தி வழி நடத்த வேண்டும் என்று தவரூபன் தெரிவித்தார்.
இது, கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், சமூக முக்கியஸ்தர்கள் உட்பட பல தரப்பினருடையதும் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் தங்கராஜா தவரூபன் வலியுறுத்தினார்.

ad

ad