தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை தமது வாக்குறுதியாகக் கொண்டு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஊடக அடக்குமுறையை கையாளும் அரசின் செயற்பாடுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான வேட்டையை முதலில் நாடாளுமன்றில் ஆரம்பித்த அரசாங்கம் அந்த வேட்டைக்கான சட்ட ரீதியான சூழல் ஒன்றை உருவாக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் ஊடகம் எவ்வாறான விடயம் ஒன்றை பிரசுரிக்க வேண்டும் என்பது ஜனாதிபதி, பிரதமர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க வேண்டிய விடயம் அல்ல என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சொல்பேச்சு கேட்கும் எதிர்க்கட்சி, சொல்பேச்சு கேட்கும் மக்கள் அமைப்புக்கள், சொல்பேச்சு கேட்கும் தொழிற்சங்கங்கள், மதத் தலைவர்கள் மற்றும் சொல்பேச்சு கேட்கும் ஊடகங்களை உருவாக்கி அதன் மூலம் சொல்பேச்சு கேட்கும் மக்களையும் உருவாக்குவதற்கே அரசு முயற்சிக்கின்றது.
பாம்பாட்டியின் முதல் வேலை அந்தப் பாம்பின் பற்களை கழற்றி பாம்மை பழக்கப்படுத்திக் கொள்வதே என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.