லைகா நிறுவனத் தயாரிப்பில் இரு படங்களை உருவாக்கவிருப்பதாகவும், அவற்றில் தனது கனவுப் படமான மருதநாயகமும் உண்டு
என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். இந்திய சினிமாவில் மிக பிரமாண்டமாக கால் பரப்பியுள்ள லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்போது ரூ 350 கோடி பட்ஜெட்டில் ரஜினியின் எந்திரன் 2.00 படத்தைத் தயாரிக்கிறது. இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் தயாராகும் படம் இது. 33 மில்லியன் பிரித்தானிய ஸ்டேலிங் பவுன்சில் ரஜினியின் படம் தயாராக உள்ளது. அடுத்து கமல் ஹாஸனுடனும் கைகோர்ப்பதை இன்று அறிவித்திருந்தது லைகா. இந்த நிலையில் லைகா தயாரிக்கும் தனது படம் என்னவென்பதை கமல் ஹாஸனே அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “நீங்க சரினு போன் பண்ணி சொன்னா போதும், ‘மருதநாயகம்’ தொடங்கிடலாம்’ என்கிறார் லைகா சுபாஷ்கரன். ஆனால், அந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முன்பான தயாரிப்பு வேலை பெருசு.அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதற்காக, எப்படி வேண்டுமானாலும் இழுத்துவிட்டு விளையாட முடியாது. இப்போது ‘மருதநாயகம்’ ஆரம்பித்தால் முடிக்க ஒரு வருடத்துக்கு மேலாகிவிடும். ஆனால், இப்போது வேறு ஒரு படம் பண்ணுகிறோம். ராஜ்கமல் பண்ணுகிறது. இதில் லைகாவும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அதன் பிறகுதான் மருதநாயகம்,’ என்றார். அதாவது முதல் படத்தை லைகாவுக்கு முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிப்பார் என்று தெரிகிறது.
இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஈழத் தமிழரும் இதுவரை , இதுபோன்ற பொருட்செலவில் திரைப்படத்தை தயாரித்தது இல்லை. காலடி பதித்ததும் இல்லை என்ற பேச்சே தற்போது அடிபடுகிறது. இந்திய சினிமாவை இதுவரை ஆட்டிப் படைத்துவந்த ரெட்டிகள், கபூர்கள், சேட்டுகள் தற்போது ஈழத் தமிழர்களை அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் உள்ளார்கள்.இது தமிழர்களுக்கு பெருமையான விடையம்.