மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உட்பட 104 பேரும் படுதோல்வி அடைந்தனர். தேமுதிகவின் இந்த தோல்விக்கு மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என்று நிர்வாகிகள் பலரும் விஜயகாந்திடம் எடுத்துக் கூறினர்.
சமீபத்தில் நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளின் வலியுறுத்தல் பற்றி பேசிய வைகோ, ‘‘தேமுதிகவும், தமாகாவும் கூட்டணியை விட்டுச் சென்றால் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்று கூறியதாக வெளியான செய்திகளை மதிமுக தரப்பில் மறுக்கவில்லை. இதனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிருப்தியில் உள்ளதாகவும், இதனால் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தேமுதிக வின் தோல்வி குறித்து ஆலோசனை நடத்திய போது, ம.ந.கூட்டணியைத்தான் நிர்வாகி கள் பலரும் குறை சொன்னார்கள். மேலும், ‘‘பூத் செலவுக்குக் கூட பணம் கொடுக்காததால்தான் தோல்வி அடைந்தோம். சொத்துக் களை அடமானம் வைத்து போட்டியிட்டதால், ஏதுமில்லாத வர்களாக உள்ளோம்’’ என்று தேமுதிக வேட்பாளர்கள் சிலர் கூறினர்.
இதன்பேரில், பூத் செலவுக்கு பணம் வாங்காத வேட்பாளர் களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க விஜயகாந்த் சம்மதித்தார். இதன்பேரில், 20 பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு ரகசியமாக பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் மக்கள் தேமுதிகவினர் (சந்திரகுமார் அணி) திமுகவுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளை செய்கின்றனர். எனவே, நிர்வாகி களை திருப்தி செய்யும் வகையில், மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதற் கான அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடவுள்ளார். கூடவே, கட்சியில் நிர்வாக ரீதியான மாற்றங்களையும் அவர் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்? என்றனர்.
காயிதே மில்லத்தின் பிறந்த நாளையொட்டி அவரது நினை விடத்துக்கு மரியாதை செலுத்த வந்த தேமுதிக இளைஞரணிச் செயலாளர் சுதீஷிடம், ‘‘மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக தொடருமா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.