புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2016

ஜெயலலிதா உடல்நிலையும் ஊர் வதந்திகளும்!

காவிரிக்காக உண்ணாவிரதம்!
செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால்,
9 மணிக்குப் பிறகு, வேதா நிலையத்துக்குள் இருந்து, மெல்லக் கிளம்பிய தகவல், “காவிரிப் பிரச்னைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்; அதற்காக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்; சசிகலா புஷ்பாவை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்’’ என்றெல்லாம் சுற்றி, கடைசியில்  அப்போலோவில் போய் நின்றது. போயஸ் கார்டனில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் கிளம்பி, கிரிம்ஸ் ரோடு அப்போலோ போனது என்று தகவல் உறுதி செய்யப்பட்டது.
போயஸ் கார்டன் டு அப்போலோ யார் அனுமதி? 
போயஸ் கார்டனில் இருந்து ஆம்புலன்ஸ் என்றால், அதில் இருந்தது யார் என்பதிலும் குழப்பம். ஏனென்றால், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவும் இருக்கிறார்; சசிகலாவும் இருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதாதான் அப்போலோவுக்குச் சென்றார் என்றால், அந்தத் தகவல் கன்ட்ரோல் ரூமுக்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அங்கு விசாரித்தபோது, “சி.எம். பாஸிங் மெசேஜ் நாட் ரிசிவ்டு” என்றுதான் தகவல் சொல்லப்பட்டது.  ஆனால், விசாரித்து.. விசாரித்து.. கிரீம்ஸ் ரோடு அப்போலோ போனபோது, அங்கு, அ.தி.மு.க கரைவேட்டிகளில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். வேறு முக்கியப் பிரமுகர்கள் யாரும் அங்கே இல்லை. அதோடு மருத்துவமனையின் மெயின் கேட் இழுத்துப் பூட்டப்பட்டு இருந்தது. நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளோடு தங்கியிருப்பவர்கள் எல்லாம் வேறு கேட் வழியாகவே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மெயின் கேட்டில் போலீஸ், அப்போலோ டாக்டர்கள், உள்ளேயிருந்து வெளியில் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதனால், அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது யார் என்பதை உறுதி செய்யமுடியவில்லை. சிலர், ’’சசிகலா’’ என்றனர்... சிலர், ’’ஜெயலலிதா’’ என்றனர்.
நள்ளிரவு தாண்டியும் இப்படிச் சுற்றிக்கொண்டிருந்த வதந்திகளை, இரவு 1 மணிக்கு  முடிவுக்குக் கொண்டு வந்தது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம். அதிகாரபூர்வமாக, ‘ஹானரபிள் சீப் மினிஸ்டர்’ என்று தொடங்கி, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் சோர்வடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அறிக்கை வாசித்தது. சரி, மருத்துவனையில் அட்மிட் ஆனது சி.எம்-தான் என்பது கன்ஃபார்ம். முதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ஆனால், அதைவிடப் பயங்கரமாக வதந்திகள் ரெக்கைகட்டிப் பறக்க ஆரம்பித்தன. 
டிஸ்சார்ஜ் 1.. டிஸ்சார்ஜ் 2... டிஸ்சார்ஜ்
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியில் வந்தபோதே அவருக்கு உடல்நிலை சரி இல்லை. அதனால்தான், தேர்தல் பிரசாரத்துக்குப் போகவில்லை. அமர்ந்துகொண்டே பொதுக்கூட்டம் மட்டும் நடத்தினார் என்று அப்போதே பேசப்பட்டது. எவ்வளவோ பெரிய பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் அட்மிட் ஆகாத ஜெயலலிதா, காய்ச்சலுக்காகவா மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்படியே, சாதாரண காய்ச்சல் என்றால், ‘டிஸ்சார்ஜ்’ எப்போது என்று அடுத்தடுத்து கேள்விகள் வதந்திகளாகப் பறந்தன. 22-ம் தேதி, இரவு 3 மணிக்கு ‘டிஸ்சார்ஜ்’ என்றார்கள். சரி, அப்படியானால், அதை உறுதிப்படுத்திவிட்டு அதன்பிறகு, ’’இங்கிருந்து கிளம்பலாம்’’ என்று நிருபர்கள் கேமரா சகிதமாக நின்றுகொண்டிருக்க, மணி 3 ஆனது... 4 ஆனது... 5 ஆனது. ஆனால், ஜெயலலிதா இன்றைய தேதிவரை டிஸ்சார்ஜ் ஆகவில்லை. 
அந்த நோய்... இந்த நோய்... எந்த நோய்?
அங்கிருந்து வந்த வழியெங்கும், “அந்த அம்மா சுயநினைவிலேயே இல்லையாம்... ஹார்ட் பிராப்ளமாம்... கிட்னி ஃபெயிலியராம்’’ என்று ஏராளமான தகவல்கள் கொட்டிக்கொண்டிருந்தன. 
“அம்மாவுக்கு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஒருவர்தான் ட்ரீட்மென்ட் கொடுக்கிறாராம். அதனால், ஹார்ட்டில்தான் பிரச்னையாம்’’ என்றார் ஒருவர். ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் வலதுகரமாக அமர்ந்திருக்கும் ஓ.பி.எஸ்ஸால்கூட, அம்மாவைப் பார்க்க முடியவில்லை. ஆனால், ஜானிஜானேகான் சாலை, பெட்டிக்கடையில் உட்கார்ந்து டீ குடிக்கும் இவருக்கு எப்படி, அந்த அம்மாவுக்கு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்தான் ட்ரீட்மென்ட் கொடுக்கிறார் என்பது தெரிந்தது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, பக்கத்தில் இருப்பவர்கள்,  பிரைன் ஃபீவர், கிட்னி ஃபெயிலியர் என்று வரிசையாகப் பற்றவைத்தனர். அவர்கள் அத்தனைபேரையும்  கிண்டலாகப் பார்த்த கறுப்புச் சிவப்பு கரை வேட்டி, “சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அதற்காக அந்த அம்மா போடும் நாடகம்” இது என்று புதிய தியரி ஒன்றைச் சொன்னார். இதுபோல், ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது தகவல்கள் புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கின்றன. அந்த நேரத்தில், 23-ம் தேதி காலை 10 மணிக்குப் பிறகு, அமைச்சர்கள் அப்போலோ மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அம்மா நலம் - போட்டு உடைத்த பொன்னையன் !
மருத்துவமனைக்குள் இருந்து வெளியில் வந்த அமைச்சர்கள், “அம்மா நலமாக இருக்கிறார். எங்களைப் பார்த்துப் பேசினார்” என்று சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், அப்போது வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், “அம்மா, நலமாக இருக்கிறார். ஆனால், அவரை யாரும் பார்க்கவில்லை” என்று உண்மையைப் போட்டு உடைத்தார். யாருமே பார்க்காதபோது, ’’ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்று எப்படிச் சொல்ல முடியும்” என்று மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தனர் நிருபர்கள். 
மிஸ்டர் வதந்தி : தமிழ்நாடு டு சிங்கப்பூர்!
இப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தபோது, டெல்லியில் உள்ள ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி, அவர்களின் தமிழகச் செய்தியாளர்களையே விசாரிக்காமல், ’’ஜெயலலிதா சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குப் போகிறார். அதற்காக டாக்டர் ராமசுப்பிரமணியன் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்று ஒரு தகவலை ஃபிளாஷ் செய்தது. அதை, தமிழகமே நம்பிக்கொண்டிருக்கையில், அவர்களுடைய தமிழ் சேனல் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது.அதை அவர்களே நம்பவில்லை. ஆனால், தகவல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பரவியது. அதையொட்டி, சிங்கப்பூர் கதைகள் லைம் லைட்டுக்கு வந்தன. சிலர், ’’சிங்கப்பூர் இல்லை... அமெரிக்காவில் உள்ள புருக்ளின் மருத்துவமனைக்குப் போகிறார். மோடியிடம் பேசியாகிவிட்டது. ஜெயலலிதாவை அழைத்துப்போக ஏர்பஸ் தயாராகிக்கொண்டிருக்கிறது’’ என்றனர். இதையடுத்து, பதறிப்போன மருத்துவமனை நிர்வாகமும் அரசாங்கமும் கூட்டாகச் சேர்ந்து ஒரு ஆபரேஷனுக்கு திட்டமிட்டனர். அதுதான், நிருபர்கள் இல்லாத பிரஸ்மீட். 
அப்போலோ டாக்டர்கள் ஷூட்டிங!
டாக்டர்கள் குழுவாக வந்து, கேமரா முன் அமர்ந்து பொறுப்பாக தாங்கள் மனப்பாடம் செய்த வசனத்தை ஒப்பித்துவிட்டுச் சென்றனர். அங்கு நிருபர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. நிருபர்களே இல்லாமல், நடந்த கேமரா ஷூட்டிங்கில் கேள்விகளுக்கே இடமில்லை. கேள்விகளே இல்லாதபோது, சரியான பதில்கள் எங்கிருந்து வரும்? ஆனால், ஏதோ ஒருவகையில், ஜெயலலிதா வெளிநாட்டுக்குச் சிகிச்சைக்குச் செல்லப்போவதில்லை என்பது உறுதியானது. அதோடு நிற்காத அரசாங்கமும், காவல் துறையும் மற்றோர் அறிவிப்பை அவசரமாக வெளியிட்டன. அதில், “முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். அவர் உடல்நிலை பற்றி வதந்தி கிளப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மற்றொரு தகவல் வெளியானது. இப்படியே இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருந்த வதந்திகளுக்கு இதுவரை முற்றுப்புள்ளி இல்லை. 
கருணாநிதி கொக்கி!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா காவிரி விவகாரம் தொடர்பாக, 27-ம் தேதி இரவு, ஒரு மணிநேரம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையானால், அந்தப் புகைப்படத்தை ஏன் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை  வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை. 
பொன்னார், நாசர் வந்தனர்!
28-ம் தேதி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், நடிகர் சங்கத்தில் இருந்து நாசர் உள்ளிட்டவர்களும் வந்தனர். மருத்துவமனைக்குள் போனவர்கள் வெளியில் வந்தனர். ’’அம்மாவைப் பார்த்தோம். நலமுடன் இருக்கிறார்’’ என்றனர். ஆனால், முதல் மாடியில் வைக்கப்பட்டு இருந்த ‘விசிட்டர்’ பதிவேட்டில் கையெழுத்துப்போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். ’’நோய்த்தொற்றுப் பிரச்னை இருப்பதால், சசிகலா மேடத்தையே இப்போது வெளியில் போகச் சொல்லிவிட்டார்களாம். பொன்னாருக்கு மட்டும் அனுமதி கொடுத்தார்களாம். இனிமேல் இவர் பெயர் பொன்னார் இல்லை. பொய்யார்’’ என்று பேசிக்கொண்டார்கள்.  
கவர்னர் வருகை!
முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பார்க்க, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், கடந்த 30-ம் தேதி வந்தார். 17 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த அவர், ’’முதலமைச்சர் வேகமாகக் குணமடைந்து வருகிறார்’’ என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அந்த அறிக்கையில் ஏகப்பட்ட குழப்பம். அதில், எங்குமே அவர் முதலமைச்சரைப் பார்த்ததாகவும், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் குறிப்பிடவில்லை. மாறாக, முதலமைச்சருக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடன் பேசினேன். அவர்கள் முதலமைச்சர் வார்டுக்கு என்னை அழைத்துப் போனார்கள் என்று மட்டும்தான் இருந்தது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய ஆளுநர் அறிக்கை, கூடுதல் வதந்திகளைக் கிளப்பிவிட்டுச் சென்றதுதான் மிச்சம்.



’நான் அம்மா பேசுகிறேன்!’
கடந்த 3-ம் தேதி மாலை நேரத்துக்குப் பிறகு, ஜெயலலிதாவே வாட்ஸ்அப்பில், ’நான் அம்மா பேசுகிறேன்... நலமுடன் இருக்கிறேன்’ என்று பேசி அனுப்பியதாக ஒரு குரல் பதிவு ஊர் சுற்றியது. ஆனால், அந்தக் குரலுக்கும் ஜெயலலிதாவின் குரலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முன்னாள் அமைச்சர் வளர்மதியின் குரலைப்போல் இருந்தது அது. அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்றாலும், வதந்திகளின் பட்டியலில் அதுவும் உண்டு. இனி, ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்று எம்.ஜி.ஆர் பேசியதாக வாட்ஸ்அப்பில் தகவல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
முதலமைச்சர் ஜெயலலிதா, வீடு திரும்பும்வரை இந்த வதந்திகளின் பயணம் ஓயப்போவதில்லை. எந்த வதந்திகள் பரவக் கூடாது என்று அரசாங்கமும் அப்போலோவும் மெனக்கெடுகிறதோ, அந்த வதந்திகள்தான் இன்றைய தேதியில் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கின்றன. 
உண்மைகள், அறை எண் 2008-ல் சிறைவைக்கப்பட்டால்... வதந்திகள் இப்படித்தான் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கும்

ad

ad