கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்தந்த சபைகளில் ஆட்சி அமைப்பது என்ற புரிந்துணர்வை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குழப்புமாக இருந்தால், பதிலடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னணி கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவருகின்றது.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் 32 சபைகளில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சபைகளிலும் கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி, அந்தச் சபைகளில் ஆட்சி அமைப்பது என்ற யோசனை வர்த்தக சங்கம் மற்றும் சிவில் தரப்புக்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு அமைவாக சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு முடிவு செய்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றிலும் ஆட்சி அமைக்கப் போகின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்திருந்தது. சபைகளில் தவிசாளர்களைத் தெரிவு செய்யும்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கும் தாங்கள் கோரவுள்ளோம் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டிருந்தது.
நல்லூர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு 5 ஆசனங்கள் கிடைத்தது. முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான சுயேச்சைக் குழு 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
சுயேச்சைக் குழுவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூடிய ஆசனங்களைக் கைப்பற்றிய சாவகச்சேரி நகர சபை மற்றும் பருதித்துறை நகர சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தி வருகின்றது.
சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும், கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அந்தச் சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. அந்தச் சுயேச்சைக் குழுவுக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சாவகச்சேரி நகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோன்று பருத்தித்துறை நகர சபையிலும் முன்னணி 6 ஆசனங்களையும், கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன. கூட்டமைப்பு அந்தச் சபையிலும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது