சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் கடிதம் அனுப்பியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், திருவாடனை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் மிரட்டும் தொனியில் அவதூறாக பேசினார்.
இதையடுத்து, கருணாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்றுமுன்தினம் அதிகாலையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் கருணாசை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி வேலூர் மத்திய சிறைக்கும் மாற்றம் செய்தனர். கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக போலீஸ் அதிகாரிகள் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தனர். சபாநாயகரின் அனுமதியின் பேரிலேயே கருணாஸ் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கருணாஸ் கைது தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சட்டவிதி 287, 288 பிரிவின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.