ராஜீவ் கொலைவழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடும் நளினி கஜா புயலால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது பங்களிப்பாக 1000 ரூபா பணத்தை வழங்கியுள்ளார். நளினி தனது வழக்கறிஞர் மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு இத்தொகையை வழங்கியிருக்கிறார் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் தொரப்பாடி மத்திய சிறையில் மகளிர் பிரிவில் தண்டனை அனுபவித்துவரும் நளினி கஜா புயலால் மக்கள் அனுபவித்துவரும் வேதனைகள் குறித்து தனது வழக்கறிஞர் மூலம் கேட்டறிந்தார்.
தன்னால் பெரிய அளவில் உதவிகள் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் இருந்த அவர் இன்று வியாழக்கிழமை தனது வழக்கறிஞரை அழைத்து சிறையில் தனது உழைப்புக்கு ஊதியமாகக் கிடைத்த தொகையிலிருந்து 1000 ரூபாவை முதல்வரின் கஜா புயல் நிதிக்கு வழங்கினார்.
'ஜெயிலில் உழைத்த காசு... இப்படியும் ஒரு மனசு...தொகைதான் சிறியதே ஒழிய அதை வழங்க முன் வந்த உங்க மனசு மிகப்பெரியது நளினி அக்கா' என்று சமூக வலைதளங்களில் மக்கள் நளினியை வாழ்த்திவருகின்றனர்.