புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், சட்டப்படியான அடுத்த தீர்மானத்தை அனுப்பி கையெழுத்திடவைக்கவில்லை!


மூடி சீல் வைத்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டிருக்கும் நிலையில், நிரந்தரமாக அதனை மூட அரசின் கொள்கை முடிவாக சிறப்புச் சட்டம் இயற்றவில்லை!

ஆனால் இவை பற்றிப் பேசவே கூடாதென்ற அடக்குமுறை! சட்டவிரோதமாகக் கட்டவிழ்த்திருக்கும் இந்த போலீஸ் ராச்சியத்தைக் கண்டிப்பதுடன், அதனைத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

அதேசமயம், சட்டப்படி அடுத்த தீர்மானத்தை அனுப்பி ஆளுநரைக் கையெழுத்திடவைக்க வேண்டும்; ஸ்டெர்லைட்டை மூட அரசின் கொள்கை முடிவாக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

28 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, சட்டப் பிரிவு 161ன்கீழ் அமைச்சரவை தீர்மானம் போட்டு அனுப்பி 100 நாட்கள் ஆகியும் ஆளுநர் அதில் கையெழுத்திடவில்லை. அதனால், அவர் கையெழுத்திட்டே தீரும்படியாக சட்டப்படியான அடுத்த தீர்மானத்தை அனுப்பியிருக்க வேண்டும்; அதை ஏன் செய்யவில்லை அதிமுக அரசு?

14 பேரை சுட்டுப் படுகொலை செய்துவிட்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைத்துவிட்டதாக அறிவித்தது தமிழக அரசு. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பெற்றிருக்கிறது அனில் அகர்வாலின் வேதாந்தா கார்ப்பொரேட் குழுமம். இதில் அரசின் கொள்கை முடிவாக சிறப்புச் சட்டம் இயற்றியே ஆலையை நிரந்தரமாக மூட முடியும் என்றிருக்க, அதனைச் செய்யாதிருப்பதேன் அதிமுக அரசு?

ஆனால் அதேசமயம் இந்தப் பிரச்சனைகள் குறித்துப் பேசக்கூட முடியாதபடி அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. சென்னையில் 7 பேர் விடுதலையை வலியுறுத்திப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைபரப்பு செயலர் பெரியார் சரவணன் கைது செய்யப்பட்டார்; பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தமிழக அரசு மூடி சீல் வைத்துவிட்டதாக அறிவித்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான உத்தரவைப் பெற்றிருப்பது, ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது; ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் தூத்துக்குடி மக்களை உலுக்கிவிட்டிருக்கிறது. அதனால் அவர்களை உசுப்பியும்விட்டிருக்கிறது.

ஆனால் அதிமுக அரசு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதையும் காவல் வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் படையை அங்கு குவித்துள்ளது.

தூத்துக்குடிக்கு வரும் அனைத்து வழிகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து வாகனத் தணிக்கை நடந்துவருகிறது. தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிகள், ஓட்டல்கள் யாவும் சோதனையிடப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேல் மக்கள் சேர்ந்து நின்றால் அவர்களைக் கலைத்துவிடுகிறது காவற்படை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக துண்டுபிரசுரம் வைத்திருந்தார்கள் என்று மாணவர்களையும் இளைஞர்களையும் கைது செய்கிறது.

ஆனால் எதற்கும் அஞ்சாமல் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவை கூடி சிறப்புத் தீர்மானம் இயற்றி கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என முழக்கமெழுப்பினர்.

இதே முழக்கத்தோடு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகள், அனைத்து சங்கங்கள், அனைத்து இயக்கங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டன.

தூத்துக்குடி புதுத்தெரு, பெரியநாயகிபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், அ. குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், பாத்திமாநகர், தாளமுத்துநகர் என அனைத்துப் பகுதிகளிலும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. வீடுகள் மட்டுமின்றி கடைகள், வாகனங்களிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன. பண்டாரம்பட்டி மைதானத்தில் பொதுமக்கள் கூடி கறுப்புக் கொடி பிடித்து அணிவகுத்து நின்றனர்.

இன்று (21.12.2018) பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உறுதியான, உண்மையான, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனுக்கள் அளிக்கவுள்ளனர்.

ஆனால் இதை அறிந்துதான் தூத்துக்குடி மற்றும் அந்த மாவட்டத்தையே காவல் வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறது அரசு எனக் குற்றம்சாட்டுகிறோம்.

போலீஸ் ராச்சியம் என்பது பிரச்சனைக்குத் தீர்வமல்ல; பிரச்சனைக்கான தீர்வு மக்கள் வேண்டுகின்றபடி தமிழக அரசின் உறுதியான, உண்மையான, தக்க நடவடிக்கைதான்.

அதாவது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில், சட்டப்படியான இரண்டாவது தீர்மானத்தை அனுப்பி சட்டப்படி ஆளுநரைக் கையெழுத்திடவைக்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அமைச்சரவை கூடி, அரசின் கொள்கை முடிவாக ஆலையை மூடுவதாக சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இதனை வலியுறுத்துகிறோம்.

ad

ad