புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் கடும் மழை பெய்து வருகிறது. கடந்த 22ஆம் திகதி இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டன. இதனால் கிளிநொச்சியில் மிகப்பெரும் வெள்ள இடர்ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக நிலமை நாளுக்குநாள் மோசமாகி வந்தது. நேற்று மாலை நிலவரப்படி 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மழை தொடர்கின்றமையாலும் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் 9 வான் கதவுகள் நேற்றும் திறந்த விடப்பட்டுள்ளமையாலும் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அல்லது ஓரிரு தினங்களில் ஒரு லட்சத்தைத் தாண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 488 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 774 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 755 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 331 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 4 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 291 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 409 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெலியோயா பிரதேசத்தில் இருந்தும் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு 8 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் மொத்தமாக 8 ஆயிரத்து 282குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 85 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 754 வீடுகள் பகுதியளவிலும் னசேதமடைந்துள்ளன.
கிளிநொச்சி
கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 624குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 986 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் 20 வீடுகள் முழுமையாகவும் 99 வீடுகள் பகுதியளவிலும் னசேதமடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7 ஆயிரத்து 665 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் 3 வீடுகள் முழுமையாகவும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பச்சிளைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 188 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் 109 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலர் பிரிவிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு 2 ஆயிரத்து 599 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும், 172 வீடுகள் பகுதியளவிலும் னசேதடைந்துள்ளன.
மன்னார்
மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் காற்றின் தாக்கத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 516 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்