தற்கொலை குண்டு தாக்குதல் நடக்கும் தினத்தன்று காலையிலும், அதற்கு முன்னைய தினமான 20 ஆம் திகதி மாலையும் தாக்குதல் குறித்த அறிவிப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் எவ்வாறான தாக்குதல் என உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இருந்தும் என்னை நீக்கிவிட்டு அதிகாரிகளின் தொடர்பையும் துண்டித்துவிட்டு என்னை பொறுப்பாளியாக்க முயற்சிப்பது தவறானது என்று கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
தாக்குதல் குறித்த தவறுக்கான பொறுப்பை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி துறந்தால், உங்களுக்கு தூதுவர் பதவியை வழங்கி உங்களின் பெயரையும் காப்பாற்றுகின்றேன் என ஜனாதிபதி என்னிடம் வலியுறுத்தினார் எனவும் தெரிவுக்குழு முன்னிலையில் அவர் சாட்சியமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்தப்பட்டது. இதில் நேற்றைய தினம் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் துறை மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவிடம் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவற்றை தெரிவித்தார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
என்னை காவல் துறை மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்து அரசியல் அமைப்பு சபையின் மூலமாக நியமிக்கப்பட்டேன். நான் பாதுகாப்பு செயலாளருக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டிய கடைமையில் ஈடுபட்டேன். அரச புலனாய்வு பிரிவுக்கு நான் கட்டளைகளை பிறப்பிக்க முடியாது. எதுவும் கூற வேண்டி இருப்பின் அதனை தெரிவுக்க முடியும். அதனை நிறைவேற்றுவதும் நிராகரிப்பதும் அவர்களின் விருப்பம் என்றே இருந்தது.
2018 அக்டோபர் 23 இற்கு பின் பாதுகாப்பு குழுக்கூட்டத்திற்கு செல்லவில்லை
நான் காவல் துறை மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் ஆரம்பத்தில் பாதுகாப்பு குழுக் கூட்டங்களுக்கு சென்றேன். எனினும் 2018 அக்டோபர் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து என்னை பாதுகாப்பு குழுக் கூட்டங்களுக்கு கலந்துகொள்ள வேண்டாம் என ஜனாதிபதி நேரடியாக அறிவித்ததாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரக இருந்த கபில வைதியரத்ன கூறினார்.
ஏன் என நான் அவரிடம் வினவினேன். என்மீதுள்ள அவநம்பிக்கை காரணமாக என்னை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறியிருக்கலாம். அதில் இருந்து தாக்குதல் நடக்கும் வரையில் நான் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் அடுத்த பாதுகாப்பு குழுக் கூட்டத்திற்கு நான் சென்றேன்.
புலனாய்வு அறிக்கை கிடைத்தது
எனினும் சம்பவத்தை அடுத்து இந்த சம்பவத்திற்கு பொலிஸ்மா அதிபர் மட்டும் தான் பொறுப்பு என்ற வகையில் குற்றச்சாட்டுக்கள் என்மீது திருப்பப்பட்டு விட்டன. இதுவரையில் இது குறித்து நான் வாய் திறக்காது உள்ளேன். எனது சில கடமை பொறுப்புக்கள் கைவிடப்பட்டுள்ளதை நானும் ஏற்றுகொள்கின்றேன். ஆனால் நான் மட்டுமே பலிக்கடா ஆகமுடியாது. குறித்த உளவுத்துறை அறிக்கை 9 ஆம் திகதி எனது கைகளுக்கு கிடைத்தது. இரண்டு கடிதங்கள் கிடைத்தன. தேசிய புலனாய்வு பணிப்பாளர் மூலமாக ஒரு கடிதமும், சிசிர மென்டிஸ் மூலமாக ஒரு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. இரண்டு கடிதங்களில் இருந்த காரணிகளும் ஒன்றாக இருக்கவில்லை. ஒன்றில் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆனால் உறுதியில்லாத வகையிலும் இருந்தது. மற்றைய கடிதத்தில் தாக்குதல் குறித்து சில காரணிகள் கூறப்பட்டிருந்தன. எனினும் 9 ஆம் திகதி புலனாய்வு மீளாய்வு கூட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எனக்கு கிடைத்த கடிதத்தை நான் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பினேன்.
பாதுகாப்பு செயலாளரிடம் நான் இது குறித்து வினவினேன். ஜனாதிபதிக்கு அறியத்தந்ததாவும், ஏற்கனவே ஜனாதிபதி இதனை அறிந்துள்ளதாகவும் அவர் செயலாளருக்கு தெரிவித்ததாகவும் என்னிடம் கூறினார். என்னையும் பாதுகாப்பு கூட்டங்களுக்கு வரவேண்டாம் என ஜனாதிபதி கூறியிருந்த காரணத்தினாலும் ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் நேரடி தொடர்பு இல்லாத காரணத்தினாலும் நான் இது குறித்து வினவ முயற்சிக்கவில்லை.
அதுமட்டும் அல்ல ஏப்ரல் 18 திகதி, 19 ஆம் திகதி 20 ஆம் திகதி மூன்று அறிக்கைகள் எனக்கு கிடைத்தன. அவற்றில் இந்த தாக்குதல் குறித்து எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. அவற்றில் ஒரு கடிதத்தில் காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு குறித்து குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்கொலை தாக்குதல் நடத்தும் திட்டங்கள் குறித்து எதுவும் புலனாய்வு அதிகாரிகளினால் அறிவிக்கப்படவில்லை. அதுமட்டும் அல்ல குறித்த தகவல் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிடப்பட்டதால் அவற்றில் என்னால் தலையிட முடியாது.
காவல் துறை மா அதிபர் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதியிடம் பரிமாறும் ஏற்பாடு இருக்கவில்லை. தேசிய புலனாய்வுத்துறை பணிப்பாளர் நேரடியாக அந்தத் தகவல்களை ஜனாதிபதியிடம் வழங்கி வந்தார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் புலனாய்வுத் தகவல்கள் எதனையும் ஜனாதிபதியிடம் கூறினால். அதை புலனாய்வுத்துறை பணிப்பாளர் நிலந்த ஏற்கனவே தன்னிடம் கூறிவிட்டார் என ஜனாதிபதி சொல்லு வார் என பாதுகாப்பு செயலாளர் என்னிடம் தெரிவித்திருக்கின்றார்.
இரண்டு தொலைபேசி அழைப்புக்கள்
எனினும் 20 ஆம் திகதி பிற்பகல் 6 மணியில் இருந்து 8 மணிக்குள் எனக்கு தேசிய புலனாய்வு அதிகாரியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு கிடைத்தது. நாளைய தினம் 21ஆம் திகதி ஏதோ அசம்பாவிதம் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது. அது என்ன என்பது தெளிவாக கூறப்படவில்லை. பின்னர் அன்றே பாதுகாப்பு செயலாளர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்வாறு ஒரு சம்பவம் குறித்து அறியக்கிடைத்ததா என வினவினார். எனினும் அப்போதும் என்ன சம்பவம் என்ற தெளிவான தகவல் இருக்கவில்லை. இந்த புலனாய்வு தகவல்கள் குறித்து பிரதி காவல் துறை மா அதிபர்களுக்கு அறிவித்தேன்.
உரியவர்களுக்கு அறிவுக்குமாறு பணித்தேன். அவசரகால சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்க எனக்கு அதிகாரம் இல்லை. அடுத்த நாள் காலை அதாவது 21 ஆம் திகதி காலையில் 6 மணியில் இருந்து 7.45 மணிக்குள் மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது.
இன்றைய தினம் ஏதோ அசம்பாவிதம் இடம்பெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எங்கு யார் என்ற எதுவும் எமக்கு தெரியவில்லை. உடனடியாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எனக்கும் இருக்கவில்லை.
எனினும் என்னை குற்றம் சுமத்தும் அனைவரிடமும் நானும் கேள்வி கேட்க வேண்டும். என்னை பாதுகாப்பு குழுவில் இருந்து வெளியேற்றிவிட்டு, எனக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்புகளை துண்டித்துவிட்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதியில் இருந்து தாக்குதல் நடக்கும் வரையில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது.
புலனாய்வுத்துறையும் உளவுத்துறையும் பாதுகாப்பு அமைச்சும் இராணுவ புலனாய்வுத்துறையும் ஏனைய அதிகாரிகளும் என்ன செய்தனர்? எனக்கு கிடைத்த தகவல் பாதுகாப்பு செயலாளருக்கும் வழங்கப்பட்டது. ஏன் உடனடியாக பாதுகாப்பு குழுக் கூட்டத்தை கூட்டி உடனடியாக ஏன் தீர்மானம் எடுக்கவில்லை?
பொறுப்பிலிருந்து தப்பிக்கமுடியாது
அதுமட்டும் அல்ல கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தேசிய தவ்ஹித் ஜமாஅத் குறித்து தகவல்கள் கிடைத்தன. அப்போது நானும், நாலக டி சில்வாவும் மூன்று தடவைகள் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து உரிய காரணிகள் குறித்து தெளிவுபடுத்தினோம். ஆகவே எவரும் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. எனினும் இவை நடந்து முடிந்துவிட்டன.
தாக்குதல் நடந்த பின்னர் 23 ஆம் திகதி பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது. பின்னர் 24 ஆம் திகதி காலையில் ஜனாதிபதி என்னை தொடர்புகொண்டு என்னை சந்திக்க வேண்டும் என கூறினார். நான் சந்தித்தேன்.
அப்போது அவர் கூறியதானது " நடந்த சம்பவங்களுக்கு என்னால் பொறுப்பை ஏற்றுகொள்ள முடியாது. எனக்கு இது அறியத்தராத விடயம். ஆகவே நீங்கள் தவறை ஏற்றுக்கொண்டு பதவியை துறக்க வேண்டும். எப்படி இருந்தாலும் நீங்கள் தான் குற்றவாளி என்று முடிவு வரும். ஆகவே நீங்கள் பதவி துறந்தால் உங்களின் மீதுள்ள அவப்பெயரை நீக்கிவிடுவதுடன் வெளிநாடு ஒன்றுக்கான தூதுவராக உங்களை நியமிக்கின்றேன். ஆகவே நீங்கள் குற்றவாளியாகி தண்டனையை பெற்று ஓய்வூதியமும் இல்லாது வீடு செல்ல போகின்றீர்களா அல்லது பதவியை துறந்து சலுகையுடன் செல்கின்றீர்களா என்பதை நீங்கள் தீர்மானித்து எனக்கு கூறுங்கள்"என்றார்.
எனினும் நான் மௌனமாக இருந்தேன். அடுத்த நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது பதிலை கேட்டார். "என்ன இன்னமும் உங்களின் கடிதம் எனக்கு வரவில்லை" என கேட்டார். அப்போதும் நான் பதில் தெரிவிக்கவில்லை. அவரது பொறுமைக்கும் எல்லை இருக்கும் தானே? ஆகவே பொறுமையிழந்து என்னை கட்டாய விடுமுறையில் அனுப்பிவி