தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனிடத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோருக்கும், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் 11 மணியளவில் மாவிட்டபுரத்தில் உள்ள மாவை.சோ.சேனாதிராஜாவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் முதலில் சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்கள். அதனை தொடர்ந்து, வவுனியாவில் இறுதியாக நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தமிழரசு கட்சி தனியாக முகங்கொடுப்பது பற்றி வெளிப்படுத்திய பிரதிபலிப்புக்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயத்தில், தமிழரசு கட்சியானது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தனித்து முகங்கொடுப்பதாக இருந்தால் தாமதமின்றி அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், அதன் சாதக, பாதக நிலைமைகள் தொடர்பிலும் சித்தார்த்தன் மற்றும் செல்வம் ஆகியோர் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட மாவை.சோ.சேனாதிராஜா, புளொட், ரெலோ தலைவர்கள் என்னை நேரில் வந்து சந்தித்திருந்தார்கள். அதன்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கான சாதக நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். இதன்போது தமிழரசு கட்சியின் சார்பில் தனியாக போட்டியிடுவது பற்றி வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராய்ந்திருந்தோம். தமிழரசு கட்சியை பொறுத்தவரையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சியாகும். தற்போதைய நிலையில், கூட்டுச்செயற்பாடு மற்றும் ஒற்றுமையான பயணம் என்பவற்றை தமிழரசு கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றது. அவ்விதமானதொரு சூழலில் தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக ஒன்றுபட்ட பயணமே அவசியமாகும். அந்த வகையில், ஒற்றுமையான தேர்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் முகங்கொடுப்பது பற்றியே தீவிரமான கரிசனையை கட்சி கொண்டுள்ளது. அந்த வகையில் கட்சியானது தனித்து செயற்படுவதையோ, தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்றார். |