குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர். இந் நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் குறித்த காணிசுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர். அத்தோடு குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்கமுடியாதென அப்பகுதிமக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவைத்திணைக்களத்தினர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். மேலும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டசெயலாளருமான துரைராசா ரவிகரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அன்ரனி.ஜெஜநாதன் பீற்றர் இளஞ்செழியன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துயன், மாவீரர்களின் பெற்றோர்கள், கிராமமக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை தற்போது 23ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதுடன், அங்கு இரணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள், இராணுவத்தினருக்கான விளையாட்டு செயற்பாடுகள் இடம்பெறும் இடமாகவும் அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணி காணப்படுகின்றது. அதுதவிர குறித்த காணியில் இராணுவத்தினரால் உணவகம் ஒன்றும் நடாத்தப்பட்டு வருகின்றது. இந் நிலையில் துயிலுமில்லக்காணியின் வெளிப்புறத்திலேயே வருடாவருடம் மாவீரர் நாளில் மாவீரர் நாள் அஞ்சலிகள் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலில் அண்மையில் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |