இலங்கை அரசியலில் நீண்டகாலம் அமைச்சராகவும் மற்றும் ஈ.பி.டி.பி (EPDP) கட்சியின் தலைவராகவும் விளங்கிய டக்ளஸ் தேவானந்தா, கடந்த டிசம்பர் 26 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டமை சர்வதேச ரீதியாகவும் உள்ளூர் அரசியல் களத்திலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு வழங்கப்பட்ட அரச ஆயுதங்கள், பாதாள உலகக் கும்பல் தலைவரான மாகந்துரே மதூஷின் வசம் இருந்தமை கண்டறியப்பட்டதே இந்த அதிரடி நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும்.
குறிப்பாக, அவருக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் காணாமல் போனது தொடர்பாகப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கைது நடவடிக்கை தமிழர் தரப்பு உட்பட தற்போதைய அரசியல் களத்தில் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.
யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதனை நீதிக்கான ஒரு தொடக்கமாகப் பார்க்கின்றனர்.
அதேவேளை, ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள் இதனை அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என விமர்சிக்கின்றனர்.
இந்தநிலையில், ஜனவரி ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா விவகாரத்தில் மற்றைய அரசியல் தலைமைகள் மௌனம் காப்பதற்கு பலதரப்பட்ட காரணங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.
- அதாவது கடந்த தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக்கூடப் பெற முடியாமல் போனது, அவர் மீதான மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
- அத்தோடு, தற்போது அவர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாததால் அவருக்காகப் பரிந்து பேசுவதால் மற்ற அரசியல்வாதிகளுக்கு எந்த ஆதாயமும் இல்லை.
- இதனுடன், புதிய அரசியல் சூழலில் துணை இராணுவ பின்னணி கொண்ட ஒருவருடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள தலைமைகள் விரும்பவில்லை.
- கடந்த அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் இருப்பதால் இவருக்கு ஆதரவளிப்பது தமக்கான வாக்கு வங்கியைப் பாதிக்கும் என அவர்கள் அஞ்சுவதும் வெளிப்படுப்படுகின்றது.