பாஜக, பாமக, அமமுக என்று வலிமையான ஒரு என்டிஏ கூட்டணியை அதிமுக- பாஜக இணைந்து உருவாக்கி வருகிறது. அதேநேரம் ஓபிஎஸ் எதிர்காலம் என்னவாகும் என்பதில் கேள்விக்குறியே நிலவுகிறது. கூட்டணி கடந்த மாதம் கூட்டணி தொடர்பான கேள்வி எழுந்தபோது "தை பிறந்தால் வழி பிறக்கும்" என ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனாலும், தை மாதம் பிறந்த பிறகும் அவர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் தை மாதம் முடிய டைம் இருக்கு என்றே சொல்லி வருகிறார். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை கூட்டணி தொடர்பாக அவர் அளித்த பதில் பேசுபொருள் ஆகியுள்ளது. சென்னையில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்ற ஓபிஎஸிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கூட்டணி தொடர்பான அறிவிப்பை எப்போது எதிர்பார்க்கலாம் எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஓபிஎஸ் அதற்கு எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.. அதேபோல நீங்கள் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. என்ன நடந்தாலும் ஓபிஎஸ், சசிகலா அதிமுக கூட்டணிக்குப் பாதகமாகச் செயல்பட மாட்டார் என டிடிவி தினகரன் சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, "ஓ அப்படியா!" என்று மட்டும் பதிலளித்தார். கூட்டணி குறித்து அறிவிப்பை எப்போது எதிர்பார்க்கலாம் என்ற மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே அவர், "இந்த மாத இறுதிக்குள் எதிர்பார்க்கலாம்" என அவர் பதிலளித்தார். திமுக கூட்டணியில் சேர்வது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறதா என்ற கேள்விக்கு அவர், "நீங்கள் எதற்காக இந்த மாதிரி கேள்விகளைக் கேட்கிறீர்கள் எனப் புரிகிறது" என மட்டும் பதிலளித்துச் சென்றார். கூட்டணி குறித்த முடிவை ஓபிஎஸ் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் பதில் கொடுக்காமலேயே செய்து வருகிறார். பின்னணி டிடிவி தினகரனை தொடர்ந்து ஓபிஎஸும் என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவில் மீண்டும் அவரை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். இதற்காகப் பேச்சுவார்த்தை எல்லாம் நடந்துள்ளது. ஆனால், ஓபிஎஸை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருக்கிறார். எடப்பாடி ஆதரவாளர்கள் வரிசையாக விட்டுச் செல்லவே ஒரு கட்டத்தில் பிரஸ் மீட்டில் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் எனச் சொல்லிக் கூட தூதுவிட்டார். ஆனால், எடப்பாடி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஓபிஎஸை நீக்குவது என்பது தான் எடுத்த முடிவு இல்லை.. பொதுக்குழு எடுத்த முடிவு என்றும் அதை மாற்ற முடியாது என்றும் சொல்லிவிட்டது குறிப்பிடத்தக்கது. |