புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2013


என்னை இடைஞ்சலாக கருதினால், பொறுப்பானவர்களிடம் கட்சியை கையளித்து விட்டு ஒதுங்கத் தயார் – ஆனந்தசங்கரி!

விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமின்றி மேற்கிலும் தெற்கிலும் மத்தியிலும் வாழுகின்ற தமிழ் மக்களும் ஏனைய தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் இன்று காலத்தின் கட்டாயமாகும். அரசுடன் முரண்படுவதற்காக அன்றி ஏனைய இன மக்களை பாதிக்காத வகையில் அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதற்காகவே , இதில் மாறுபட்ட கருத்துக்கே இடமில்லை. என்னையும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பொறுத்த வரையில் சமாதானத்தையும் சமத்துத்துவத்தையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு பொது திட்டத்திற்கமைய அனைவருடனும் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான்,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் கியூ. சி. ஆகியோரின் ஆசிர்வாதத்தோடும் ஆதரவோடும் ‘ஈழத்து காந்தி’ என அனைவராலும் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கியூசி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதை எதிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் எதுவும் இருக்க முடியாது. தமிழ் காங்கிரஸீம் தமிழரசுக்கட்சியும் இணைந்து உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். இந்த இரு கட்சிகளின் அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தைக் கொண்டனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த காலம் தொடக்கம் திருவாளர் மு. திருச்செல்வம் கியூ. சி . எஸ்.ஜே .வி செல்வநாயகம் கியூ.சி . ஜி.ஜி. பொன்னம்பலம் கியூ.சி. த.வி.கூ யின் செயலாளர் நாயகமும் அன்றைய எதிர்கட்சித் தலைவருமான அ. அமீர்தலிங்கம் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்களான வே. யோகேஸ்வரன் , மு. சிவசிதம்பரம் ,கா. திருநாவுக்கரசு, அ. தங்கத்துரை, மற்றும் முன்னாள் யாழ். மேயர்களான திருமதி. சறோஜினி யோகேஸ்வரன் பொன். சிவபாலன்,இன்னும் பலர் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் ஈமக்கிரிகைக்களுக்காக எடுத்து சென்ற வேளையில் புனிதமானதும் அனைத்து தமிழ் மக்களாலும் மதிக்கப்பட்டதுமான உதயசூரியன் கொடியினால் போர்த்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டனர். உதயசூரியன் சின்னத்தைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பதிலாக வீட்டுச் சின்னத்தைக் கொண்ட தமிழரசுக் கட்சியை மீள இயங்க வைக்க எவருக்கும் அவசியமும் தேவையும் இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தமிழரசுக் கட்சியை செயலிழக்கச் செய்து வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை வளர்த்து எடுத்தார்.
1977 ஆம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கிலும், கிழக்கிலும், தமிழர்கள் கூடுதலாக உள்ள தொகுதிகளில் 500 வாக்குகளால் தோல்வியடைந்த ஒரு தொகுதியைத் தவிர ஏனைய 19 தொகுதிகளிலும் வெற்றியீட்டியது. மறைந்த தலைவர்கள் ஆரம்ப கால உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை சமாதானத்தையும் அஹிம்சையையும் பேணி காக்க தொடர்ந்து வரும் பல தலைமுறைகளுக்கு பரம்பரைச் சொத்தாக விட்டுச் சென்றுள்ளனர். தமிழரசுக் கட்சியின் ஸ்தாபர் தந்தை செல்வா அவர்கள் தான் உருவாக்கி செயலிழக்க வைத்த தமிழரசுக் கட்சி என்றாவது ஒரு நாள் தான் தமிழ் மக்களின் உரிமைகளை சாத்வீக முறையில் வென்றெடுக்கவென வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிப்பதற்கு யாரும் உபயோகிப்பார்கள் என்று கனவில் கூட ஒரு போதும் நினைத்திருக்கமாட்டார்.
என்னைப் பொறுத்த வரையில் நாட்டுக்கும் எனது மக்களுக்கும் கட்சியின் நலனுக்காக தம் உயிரை அர்ப்பணித்த பல்வேறு தலைவர்களுக்கும் எனது கடமையை செய்துவிட்டேன். அஹிம்சைக்கு கட்டுப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் கதவுகள் பூட்டப்பட்டு இருக்காது. அதற்கு முரணாக இக்கட்சியை காப்பாற்றி தலைவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற பல்வேறு கஸ்டங்கள் இடயூறுகளை எதிர் நோக்க வேண்டியிருந்தது. கட்சியில் நான் தொடர்ந்தும் செயற்படுவது எவருக்கேனும் இடைஞ்சலாக இருக்குமேயானால் இக்கட்சியை பொறுப்புள்ளவர்களிடம் கையளித்து விட்டு ஒதுங்கத் தயாராக இருக்கிறேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இலட்சியத்திற்காக உழைக்கக்கூடிய இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கட்சியுடன் இணைத்து பேராசையும் பேராவலும் கொண்ட அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற அழைக்கிறேன். கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாக உழைக்கும் அனைவரும் எம்முடன் இணையலாம், என்றும் கூறிவைக்க விரும்புகின்றேன்.

ad

ad