வடக்கில் உருவாகியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டு வரவிருந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை
தொடர்பாக ஆளுந்தரப்பு எம்.பி.ஏ.எச்.எம்.அஸ்வர் எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினையால் நேற்று வியாழக்கிழமை சபை நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியினால் 10 நிமிடங்களுக்கு இடை நிறுத்தப்பட்டன.
பாராளுமன்றத்தில் நேற்று வடக்கில் உருவாகியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தன் எம்.பி. சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை விவாதத்திற்கு சமர்ப்பிக்க முற்பட்ட போது ஒழுங்குப் பிரச்சினை கிளப்பிய அஸ்வர் எம்.பி.இவ்விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் 177/2013, 178/2013, 179/2013, 180/2013, 236/2013, 237/2013, 238/2013 ஆகிய இலக்கங்களுக்கிடையிலான அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் அதேபோல் 145/2013, 135/2013, 205/2013 ஆகிய இலக்கங்களிலான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுடன் அவற்றில் அமைச்சர் ஒருவரும் பிரதிவாதியாக இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட அமைந்திருப்பதற்கு அமைய விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாதென்று சுட்டிக் காட்டினார். அதன் பிரகாரம் இவ்விடயம் தொடர்பில் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் பிரதி சபாநாயகரிடமிருந்து தீர்ப்பொன்றை எதிர்பார்ப்பதாகவும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.
எனினும் இவ்விடயமானது சபாநாயகரின் முன்னிலையில் பல தடவைகளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்டு இணக்கம் காணப்பட்டதற்கமைய விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அஸ்வர் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினை தொடர்பில்லாததொன்று என ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கருணாநாயக்க எம்.பி. சுட்டிக் காட்டினார். இதேவேளை ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுர திஸாநாயக்க இதன் போது கருத்து வெளியிடுகையில், இவ்விடயம் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 3 தடவைகளுக்கும் அதிமாக பேசப்பட்டுள்ளது. அவற்றில் சபை முதல்வர், ஆளுந்தரப்பு பிரதம கொறடா இருவரும் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு மக்களின் காணி பிரச்சினைகள் பற்றி பேசுவது தொடர்பில் ஆளுந்தரப்பில் எவரும் அதன் போது ஆட்சேபம் வெளியிட்டிருக்கவில்லை.
எனவே வழக்குகள் தொடர்புபட்ட விடயங்கள் அல்லது ஏனைய காணி பிரச்சினைகளை பற்றி நாம் இங்கு பேச முடியும். ஆகையால் இந்த பிரேரணையை விவாதிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த நேரம் பிரேரணையை கொண்டு வருவதற்கு நாங்கள் இணக்கம் வெளியிட்டிருந்த அதேநேரம் உறுப்பினர் ஒருவர் சபையின் பிரேரணை தொடர்பில் பிரச்சினை கிளப்புவதற்கான உரிமையை மறுக்க முடியாது. வழங்கும் தீர்ப்வை தாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் தான் பிரேரணையின் பிரதிகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கிடைத்ததன் பின்னர் தான், அதன் உள்ளடக்கம் தெரியவரும் என்றும் ஆளுந்தரப்பின் பிரதம கொறடவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். எனினும் இவ்விடயம் பற்றி கட்சித் தலைவர் கூட்டத்தைக் கூட்டி சுட்டிக்காட்டி ஆராயும் பொருட்டு சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு இடை நிறுத்துவதாக சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி பிற்பகல் 2.15 க்கு சபைக்கு அறிவித்தார்.