தடுப்பில் உள்ள இரு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கு சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி
சுவிற்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இலங்கையில் கைது செய்யப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் இருவரையும், பார்வையிடுவதற்கு இலங்கை அரசாங்கம், சுவிஸ்அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக
குடியேற்றத்துக்கான சுவிஸ் சமஸ்டிப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கம் கடந்த 2011ஆம் ஆண்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இரு தமிழர்களை திருப்பி அனுப்பியிருந்தது.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்தே, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை, சுவிஸ் அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி இடைநிறுத்தியது.
இந்நிலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இரு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களையும் சுவிஸ் அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இருவரினதும், புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதில் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.