உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த
செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று கண்பிடிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் அக்கறையின்மையினாலே இந்த கொடூர செயல் நடத்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் சார்வேஷ் யாதவ் மற்றும் ராக்ஷாபால் யாதவ் ஆகிய இரண்டு பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மான்சிங் சவுவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பலில் ஒருவனான பாபு யாதவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர் என்று மான்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
சிறுமிகள் கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதிகளில் பரவியதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமிகள் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, சிறுமிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.